[ad_1]

Chennai: 

சசிகலாவை சந்திப்பதற்காக இன்று அவசரப் பயணமாகப் பெங்களூரு சென்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'விவேக்கை சமாதானப்படுத்த முடியாதது ஒரு காரணமாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு இளவரசி குடும்பத்தை வளைத்துவிடக் கூடாது என்பதும் மிக முக்கியமான காரணம். விவேக்கைச் சமாதானப்படுத்தும்விதமாகச் சசிகலாவிடம் சில விஷயங்களைப் பேச இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்த அதே அளவுக்கு இளவரசி குடும்பத்தின் செயல்பாடுகள் தினகரனுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தன. தேர்தல் வாக்குப்பதிவுக்கு முதல்நாள் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோவும் இதைக் 'கீழ்த்தரமான செயல்' என இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா விமர்சித்ததும் அரசியல் அரங்கில் உற்று கவனிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சசிகலாவை சிறையில் சந்தித்து ஆசி பெற்றார் தினகரன். இந்தச் சந்திப்பில், ஜெயா டி.வி நிர்வாகம், விவேக் ஜெயராமனின் செயல்பாடுகள், இளவரசியின் பேட்டிகள் ஆகிய அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். விவேக்குக்கு எதிரான விமர்சனம் என்பதால், இதற்குச் சசிகலா பெரிதாக எந்த விளைவையும் காட்டவில்லை. சந்திப்பின் முடிவில் பேசிய தினகரன், 'தேர்தல் செலவுகளுக்குக்கூட விவேக்கிடம் சென்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவரிடமிருந்து எனக்கு எந்த உதவியும் வரவில்லை. அரசியல்ரீதியாக நான் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். அவரிடம் இதுபற்றிப் பேசுங்கள்' எனக் கூறிவிட்டு வந்துவிட்டார்.

இந்தச் சந்திப்பு குறித்து பேட்டியளித்த தினகரன், 'சசிகலா மௌனவிரதத்தில் இருக்கிறார். ஜனவரி இறுதிவரையில் இது தொடரும்' எனக் கூறியபோது, அவரின் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகத்தையும் காண முடியவில்லை. அரசியல்ரீதியான அதிரடிகளைவிட குடும்பரீதியான தடைகளைச் சமாளிக்க முடியாமல் பெரிதும் திணறிக்கொண்டிருக்கிறார் தினகரன். இந்நிலையில், ஜனவரி முதல் வாரம் சசிகலாவை சிறையில் சந்தித்தார் விவேக் ஜெயராமன். இந்தச் சந்திப்பின்போது உச்சகட்ட கோபத்தில் இருந்திருக்கிறார் சசிகலா. 'நீதான் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். இவ்வளவு கடுமையான சூழலிலும் வெற்றியைப் பெற்றது சாதாரண விஷயம் அல்ல. உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனால் எப்படி' எனக் கூற, 'நீங்கள் சொல்லித்தான் அனைத்தையும் செய்தேன். இப்படியொரு கெட்ட பெயர் சம்பாதிப்பதை நான் விரும்பவில்லை. நீங்கள் கொடுத்த பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்கிறேன்' என ஆவேசத்தை வெளிப்படுத்திவிட்டு வந்துவிட்டார் விவேக். 



இந்த நிலையில், இன்று காலை அவசரப் பயணமாகப் பெங்களூரு சிறைக்கு விரைந்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், "கணக்கு வழக்குகளை விவேக் திறமையாகக் கையாள்கிறார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்டவர்கள் கூட்டங்களை நடத்தினர். இந்தக் கூட்டங்களுக்கான வேலைகளை முன்னின்று செய்தது விவேக். அதன்பின்னர், அவருடைய செயல்பாடுகள் எதுவும் தினகரனுக்கு ஆதரவாக இல்லை. ஜெயா டிவி-யில் பிரசாரக் காட்சிகளை ஒளிபரப்புவதோடு நிறுத்திக்கொண்டார். வேறு எந்தவிதமான பொருளாதார உதவிகளையும் அவர் செய்யவில்லை. இதைப் பற்றிப் பலமுறை கேட்டபோதும், 'சின்னம்மாவிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை' என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார் விவேக். இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டப்பட்ட சில அமைச்சர்கள் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.

`விவேக் அமைதியாக இருந்தால் போதும்' எனச் சிலர் கூறிய வார்த்தைகளை இளவரசி குடும்பம் ஏற்றுக் கொண்டது. அதனால்தான், தினகரனுக்கு எதிராகக் கிருஷ்ணபிரியா கிளம்பியபோதும் அவரை சமாதானப்படுத்த விவேக் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த சில நாள்களாக இளவரசி குடும்பத்துக்கும் தினகரனுக்கும் நடக்கும் மோதல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆளும்கட்சி விரும்புகிறது. ஒட்டுமொத்த குடும்பத்தையும் எடப்பாடி பழனிசாமி வளைத்துவிட்டால், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் உள்பட அனைத்து நிர்வாகங்களிலும் தேவையற்ற சிக்கல் ஏற்படும் என டி.டி.வி நினைக்கிறார். எனவேதான், விவேக்கை சமாதானப்படுத்துங்கள் என்ற கோரிக்கையோடு சசிகலாவை அவர் சந்திக்க இருக்கிறார். ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார் விவேக். சசிகலா சமாதானப்படுத்தினால் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். இன்னும் ஓரிரு நாள்களில் சசிகலாவை விவேக் சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன" என்றார் விரிவாக. 

"ஜெயா டிவி நிர்வாகத்துக்குள் குழப்பங்களை உருவாக்கும் வேலைகளைத் தினகரன் தரப்பினர் தெளிவாகச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய ஆட்களைப் பதவிக்குக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் தினகரன் மனைவி அனுராதா. 'அவர்களுக்கு நான்தான் பிரச்னை என்றால் என்னிடம் கேள்வி கேட்கட்டும். என்னால் பொறுப்புக்குக் கொண்டு வருபவர்களை வீழ்த்த நினைக்கக் கூடாது' எனக் கோபமாகப் பதில் அளித்துவிட்டார் விவேக். அவரை சமாதானப்படுத்துவதற்கு குடும்ப உறுப்பினர்கள் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இன்றளவும் சில அமைச்சர்கள் விவேக்கிடம் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான். இதைத் தவறாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது? அந்த அமைச்சர்கள் பழைய பாசத்தில் பேசி வருகின்றனர். இதையே துரோகிகளிடம் கைகோத்துச் செயல்படுவதாக அவதூறு பரப்புவது எந்த வகையிலும் சரியானதல்ல. சசிகலாவின் சமாதானத்தைப் பொறுத்துதான் விவேக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையப் போகின்றன" என்கின்றனர் விவேக் தரப்பில். 


"உளவுத்துறையின் துணையோடு மன்னார்குடி குடும்பத்துக்குள் பெரும் பிளவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தினகரனை வீழ்த்துவதற்கு இவர்களே போதும் என்ற மனநிலையில் அவர் இருக்கிறார். தினகரனின் இன்றைய சிறை சந்திப்பு என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கப்போகிறது என்பது வரும் நாள்களில் தெரிந்துவிடும்" என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.  
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");