[ad_1]
ஈசன்மலை! தமிழகத்தில் இன்னும் இயற்கை அழகு கெடாத பசுமை மலை. இங்கு ஜம்புகேஸ்வரரும், முருகப்பெருமானும் தனித்தனியாக அருளாட்சி புரிந்து வருகிறார்கள். ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ள ஈசன் மலை உங்களை நீங்களே உணர்ந்துகொள்ளவும், உள்ளார்ந்த அமைதியை உங்களுக்குத் தரவும் உதவும். ஈசன்மலையில் வியந்து போற்றிய சில காட்சிகள் போட்டோ வடிவில்...
இயற்கையும், இறைவனும் இணைந்து அருளாட்சி செய்யும் ஈசன் மலையின் எழிலார்ந்த தூர தரிசனம் .. ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி ... ஐயன் ஈசன் திருவடி போற்றி போற்றி ..
மலையடிவாரத்தில் வரசித்தி விநாயகர். வருபவர்களுக்கு வழிகாட்டும் ஞானத் திருவடிவாய் நமக்கு அருள் செய்கிறார்.
எங்கு நோக்கினும் இயற்கையின் வனப்பினை எடுத்துக்கூறும் ஈசன்மலையின் எழிலார்ந்த பகுதி.
படைப்பின் ஒவ்வொரு துளியிலும் படைத்தவனின் திறமையை எண்ணி வியக்கிறோம். உண்மையில் நாமும் ஈசன் படைப்பு, இதுவும் ஈசன் படைப்பென்றால், இதுவும் நாமும் ஒன்றுதானோ?
என்னென்னவோ மூலிகைகள்; எத்தனையோ மரம், செடி, கொடிகள். இது ஈசன்மலையா? இறைவனின் வைத்தியசாலையா?
ஊற்று வெள்ளம் அரித்தெடுத்த வடுக்களோடு காட்சி தரும் மலையின் பாறைகள். நீரின் ஓட்டத்தை மட்டுமல்ல, கடந்து போன கால ஓட்டத்தினையும் காட்டும் நிலக்கண்ணாடி.
பக்தர்கள் இளைப்பாற ஈசன் மலை மண்டபம். மனிதர்கள் இளைப்பாற மண்டபம், மனங்கள் இளைப்பாற மகேசன்தானே துணை!
ஈசன்மலை முருகனின் ஆலயம். வள்ளிக்குறமகளும், வானவர் குலமகள் தேவசேனாளும் எங்கள் வண்ணத்திருமுருகனும் வாசம் செய்யும் வீடு இது.
கண்டாலே வினை தீர்க்கும் கருணைமிகு கணநாதர், ஈசன்மலை முருகன் கோயிலில் காட்சி தருகிறார்.
தேவியர் இருவரோடு ஈசன்மலை முருகன்; தேடி வரும் பக்தர்களுக்கெல்லாம் ஓடிவரும் தலைவன். சிவலிங்கத்தோடு காட்சி தரும் முருகப்பெருமான் சிரித்த கோலத்தில் அருள்கிறான்.
ஈசன் மலைக்கு எழிலூட்டிய காளப்ப ஸ்வாமி உறங்கிக்கொண்டிருக்கும் ஞானத்தொட்டிலிது. இங்கு தியானிக்க, நல்ல குருவை அடையலாம்...
சித்தர் சுனை கிணறாக மாறியுள்ளது. எப்போதும் வற்றாத, குளிர்ச்சியான நீரைக்கொண்டிருக்கும் இந்தச் சுனை நீர் பக்தர்களுக்கு விருந்தாகவும் மருந்தாகவும் உள்ளது.
தீராத வினை தீர்க்கும் வெண்நாவல் ஊற்று. மருந்துச் சுனை... நாவல் மரத்தின் சத்துகளைக் கொண்டிருக்கும் இந்த ஊற்றுநீர், நீரிழிவு நோய்க்கு மருந்தாகிறது.
வெண்நாவல் மரத்தடியில் ஜம்புகேஸ்வரர், எளிய உருவாய், ஏகாந்த மூர்த்தியாய் காட்சி தருகிறார். நாகாபரணம் சூடிய எங்கள் நாதனை, தாயினும் சாலச்சிறந்த எங்கள் நாயகனை வணங்குகிறோம்...
வள்ளிக்குறமகளும் தேவசேனாவும் வண்ணத்திருமுருகனோடு வாசம் செய்யும் ஈசன்மலை! #VikatanPhotoStory
TAGS :
COMMENTS