[ad_1]

Chennai: 

‘ஆளும்கட்சி வென்றால்தான், ஆர்.கே.நகர் தொகுதி வளம்பெறும்’ என்ற முழக்கத்தோடு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'ஜெயலலிதா இல்லாததால், எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்' எனக் கணக்குப் போட்ட தி.மு.க-வினருக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'மதுசூதனன் வெற்றி பெற்றால்கூட பரவாயில்லை. தினகரன் வந்துவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடும்' என்ற பதற்றத்தில் இருக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 


‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்’ என்ற கட்டாயத்தில் அனைத்து அமைச்சர்களும் களமிறங்கியுள்ளனர். ஜெயலலிதா போட்டியிட்டபோதே 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய தி.மு.க, இந்தமுறை ஜெயலலிதா இல்லாத ஆர்.கே.நகரில் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என உறுதியாக நம்பிக்கொண்டிருந்தது. 'சிம்லா முத்துச்சோழனை வேட்பாளராக்கியிருந்தால், தி.மு.க வெற்றி பெற்றிருக்கும். வேட்பாளர் தேர்வில் தலைமைக் கவனம் செலுத்தியிருக்கலாம்' என்ற பேச்சுகளும் தி.மு.க-வினர் மத்தியில் எழுந்துள்ளது. அ.தி.மு.க, தி.மு.க பிரசாரத்தைவிட, தினகரன் தரப்பினரின் பிரசாரம் தொகுதிக்குள் அனல்பரப்பிக்கொண்டிருக்கிறது. "ஆளும்கட்சியைவிட அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார் தினகரன். அவரது நோக்கம் புரிந்தாலும், தொகுதி மக்களிடையே தினகரனுக்குப் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்து தி.மு.க-வினரே மிரள்கின்றனர்" என விவரித்த ஆர்.கே.நகர் தி.மு.க நிர்வாகி ஒருவர், 

"நாளை செயல் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்யவிருக்கிறார். 'ஆளும்கட்சிக்கு வாக்களித்தால் ஸ்கூட்டர் உள்பட அனைத்து உதவிகளும் தேடி வரும்' என அமைச்சர்கள் பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறி நேரம் கடந்தும் அமைச்சர்கள் பிரசாரம் செய்கின்றனர். இவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆளும்கட்சியினர் சிறப்பு மரியாதை கொடுத்தாலும், அமைச்சர்களை விரட்டுவதில் தினகரன் ஆட்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இவர்கள் மோதலால், தி.மு.க-வே வெற்றி பெறும் என நாங்கள் நினைத்தாலும், களநிலவரம் அவ்வளவு எளிதாக இல்லை. அந்தளவுக்கு தொகுதி மக்கள் மனதில் குக்கர் நிறைந்துள்ளது. தி.மு.க கூட்டத்துக்கு வரும் பெண்களைவிடவும் தினகரனுக்காகத் திரளும் கூட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தினகரன் தரப்பினரின் பிரசார வியூகம் அறிவாலயத்தை அசைத்துவிட்டது. தேர்தல் தொடர்பாக, ஆர்.கே.நகர் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் பேசும்போது, 'பணம் கொடுத்து வெற்றியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக தோற்றுப் போகலாம்' எனக் கூறியபோது, நிர்வாகிகள் சிலர், 'அதுவும் சரிதான். பொதுத்தேர்தல் வரும்போது செலவு செய்யலாம்' எனக் கூறினர். ஆனால், அடுத்து வந்த நாள்களில் ஆர்.கே.நகர் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். ‘தி.மு.க-வுக்குப் பாதகமாகத் தேர்தல் முடிவுகள் அமைந்துவிடக் கூடாது' என அச்சப்படத் தொடங்கியுள்ளனர்" என்றார் நிதானமாக. 

இதையடுத்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், "தேர்தல் ஆணையத்தில் தினகரன் கேட்டது மூன்று சின்னங்கள்தாம். அவர் தன்னுடைய மனுவில், விசில், பேட், தொப்பி ஆகிய சின்னங்களைக் கேட்டார். 'தினகரன் கேட்பதைக் கொடுத்துவிடக் கூடாது' என்பதில் தேர்தல் அதிகாரிகள் தெளிவாக இருந்தனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த தினகரனுக்குக் குக்கர் சின்னம் தேடிவந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. காலையில் எழுந்தாலே குக்கர் முகத்தில் விழிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், இந்தச் சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுவே, தி.மு.க-வின் வெற்றிக்கு இடைஞ்சலாக வந்து சேர்ந்திருக்கிறது. அ.தி.மு.க வெற்றி பெற்றால், 'அதிகார துஷ்பிரயோகத்தால் வெற்றி பெற்றார்கள்' என்று கூறிவிடலாம். அதுவே, தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் தி.மு.க-வுக்குப் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்திவிடும். ஸ்டாலின் தலைமை மீதான கேள்விகளும் எழும். எனவே, 'வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்களில் நாமும் பணம் கொடுப்போம்' என்ற முடிவுக்கு சீனியர்கள் சிலர் வந்துள்ளனர். இதை ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். தினகரனை ஓரம்கட்ட எங்களுக்கும் இதைவிட்டால் வேறு வழியில்லை" என்றார். 


ஜெயலலிதா இல்லாமல் ஆர்.கே.நகரை எதிர்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு, வாழ்வா... சாவா போராட்டமாக அமைந்துவிட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம். 'தேர்தலுக்குப் பிறகு, கட்சியே என்னுடைய கைக்கு வரும். வெற்றி அல்லது இரண்டாம் இடம்' என அதிர வைத்துக்கொண்டிருக்கிறார் தினகரன். 'இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதைவிட அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது' என தன்மானப் பிரச்னையாக ஆர்.கே.நகரைக் கவனிக்கிறது தி.மு.க. ஆர்.கே.நகர் மக்கள் கரன்சி மழையில் நனைந்துகொண்டிருக்கிறார்கள்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");