[ad_1]
ஒரு பெண்ணுக்கு வளையல் காப்பு நிகழ்ச்சி நடந்தது. வளையல் போட்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆசி வழங்கும் பேரில் கணிசமான கூட்டம் அங்கே கூடியிருந்தது. எல்லாரும் அந்தப் பெண்ணுக்கு வளையலை அணிந்துவிட்டு, வாயில் சர்க்கரையையும் அள்ளிப் போட்டு விட்டு சொன்ன செய்தி சர்க்கரையைக் கூட கசப்பாய் மாற்றிவிட்டது. "இந்தப் பாருமா! சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளையைப் பெற்றுத்தரணும்!" ஏற்கெனவே அந்தப் பெண்ணின் கணவன் "ஆண் பிள்ளை பிறந்தால்தான் என் வீட்டுக்கு வர வேண்டும் இல்லை எனில், உன் அப்பா வீட்டோடவே இருந்து விடு!" என்று சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் ஒரு பிரளயத்தை நடத்திக் கொண்டிருக்க வந்தவர்கள் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினார்கள்.
இந்த வார்த்தைகளைச் சொல்லிப் போனவர்கள் எல்லாம் ஊர்பக்கம் 'கட்டுகளத்திகள்' என்று மரியதையோடு அழைக்கப்படும் வயதில் முதிர்ந்த பெண்கள்! இது ஏதோ பெண்ணடிமை காலத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளும் அல்ல. நாகரிகம் மிகுந்த இந்தக் காலத்திலும் ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்லப்படும் வலி மிகுந்த வார்த்தைகள்.
குழந்தைப் பெறுவது ஆண் பெண் இருபாலரும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் ! இதில் பெண்ணை மட்டும் சாடுவதும் அதுவும் பெண் குழந்தை பிறக்காமல் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டுவதும் எவ்வளவு பெரிய அறியாமை!
பொதுவாக, பெண்ணியம் பேசுபவர்கள் முன் வைக்கும் கருத்து ஆண்களால்தான் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்று! ஆனால், இன்று பல பெண்கள் தாங்கள் அடிமையாய் இருப்பதுதான் தங்களின் கற்புக்கும், வாழ்க்கைக்கும் பாதுகாப்பு என்ற நினைப்பதுதான் அவர்களை இன்னும் அடிமையாய் வைத்திருக்கிறது. தங்களின் மீதான அடக்குமுறையையே இத்தனை யுகங்கள் அடிமையாய் இருந்தும் பெரும்பாலான பெண்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. இந்தச் சமூகமும், அவளைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவளை, அடிமைத் தளையைப் பூண்டு கொள்வதுதான் பெண்ணின் பிறவிப் பயன் என்னும் மடமையைப் போதித்துக்கொண்டிருக்கிறது.
எப்பொழுது ஒரு பெண் பூப்படைகிறாளோ அன்றிலிருந்து அவளுக்குப் படிப்பிக்கப்படும் வாழ்க்கைப் பாடம் என்ன தெரியுமா! திருமணம் செய்து வைக்கப்படும் இடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை நீ சகித்துக்கொள்ள வேண்டும். கணவன் எப்படி இருந்தாலும் அங்குதான் உன் வாழ்க்கை! ஒரு வேளை நீ வாழாவெட்டியாகத் திரும்பி வந்தால் இந்தச் சமூகம் எங்கள் வளர்ப்பைத்தான் குறை சொல்லும். இப்படியான படிப்பினைகளை நேரடியாகச் சொல்லாவிட்டாலும் நீட்டி முழக்கி ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்ணுக்குச் சொல்லிப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவளின் அம்மாவும் தன் அடிமை வாழ்க்கை மூலம் தன் மகளுக்கு எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டும் அதே சமயத்தில் அந்தக் குடும்பத்தின் தலைவராக இருக்கும் அப்பாவும் தன் ஆண் பிள்ளைக்கு எப்படிப்பட்ட ஆணாதிக்கத்தைப் பெண்கள்மீது செலுத்த வேண்டும் என்பதை தன் மனைவியை அடக்கி ஆள்வதன் மூலம் காட்டுகிறார். காலம் காலமாய் ஆண் பெண் வேறுபாட்டையும், பெண்ணடிமையையும், ஆணாதிக்கத்தையும் இன்றுவரை நிலைக்கச் செய்வது இந்தப் போதனைகள்தான். இதனை படிப்பு கொடுத்து மாற்றி விடலாம் என்று நினைத்தனர் பலர். இன்று எத்தனையோ பெண்கள் படித்துவிட்டார்கள். வேலைக்குப் போகிறார்கள். ஆண் பெண் பாலின விகிதம் எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது. ஆனால், மாற்றத்தின் வேகம் திருப்தியாக இல்லையே!
மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையைத் தருவதே இல்லை. ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று பெண்ணடிமை வாதம் மாறிவிட்டது என்று யாரவது சொல்ல முன்வந்தால் அவர்கள் கடைக்கோடி கிராமங்களை இன்னும் முழுமையாய் படிக்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பெண்களுக்கு வெறும் பாலியல் கொடுமை மட்டும் பிரச்னையல்ல உடலளவிலும் மனதளவிலும் இந்த சமூகம் நிதம் நிதம் ஏற்படுத்தும் வலிகள் அதிகம்! ஆனால், அதையும் அமைதியோடு ஏற்பதே பெருமை என்று போராடிக்கொண்டிருக்கிறது இந்தப் பெண் சமூகமும்! இதிலிருந்து எல்லாம் வெளியே வர ஒரே வழி பெண்களே தங்களின் பிரச்னையைப் புரிந்துகொண்டு சமூகம் என்ன நினைக்குமோ? என்று பயந்து ஒடுங்கக்கூடாது. அதைவிட மிக முக்கியமானது பெண் என்பதில் பெருமைகொள்ள வேண்டும். அந்த மனநிலைதான் பெண்ணியத்தின் முதல் படி. இந்த வேலை பெண்ணான என்னாலும் செய்ய முடியும், தனக்குப் பெண் குழந்தை பிறப்பதில் பெருமை, பெண் குழந்தை எனப் பேதம் பார்க்க மாட்டேன் என்கிற மன உறுதிகளைப் பெற வேண்டும். இவ்வாறு நினைக்கும் சகப் பெண்களை மதித்து, அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதே சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்! #CelebrateWomen
TAGS :
COMMENTS