[ad_1]

இந்தியச் சந்தையில் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளுக்கு தனி மதிப்பு உண்டு. என்ஃபீல்டு பைக்கில் செல்வதை கௌரவமாகக் கருதுபவர்கள் அநேகர். வெளிநாட்டு மோட்டார் சைக்கிள்கள் எவ்வளவுதான் சந்தைக்கு வந்தாலும், என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளின் விற்பனை மட்டும் இன்னும் குறையவேயில்லை. தற்போது 1.40 லட்சம் ரூபாய் முதல் 2.3 லட்சம் ரூபாய் வரை என்ஃபீல்டு பைக்குகள் விற்பனையாகின்றன. 2009-ம் ஆண்டிலிருந்து என்ஃபீல்டு புல்லட் தயாரிக்கும் `எய்ஷர் ' நிறுவனத்துக்கு ஏற்றம்தான். புதிய ரக புல்லட்களை வாங்க இளைஞர்கள் அதீத ஆர்வம் காட்ட, எய்ஷர் நிறுவனத்தின் பங்கு விலை 600 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்ந்தது. ஒரு என்ஃபீல்டு புல்லட்டை வாங்குவதைவிட அதன் பங்குகளை வாங்கியிருந்தால், நாமும் இப்போதைக்கு குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய்க்காவது அதிபதியாகி இருப்போம். அந்த அளவுக்கு புல்லட் ரக மாடல்களுக்கு இளைஞர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. இதற்கு, வாங்கும் திறன் அதிகரித்திருப்பதும், புல்லட்டில் நீண்ட தூரம் டிராவல் செய்ய விரும்புவதுமே முக்கியக் காரணங்கள்.



இளைஞர்களின் விருப்பத்தையும் சந்தையில் புல்லட் ரகங்களுக்கு உள்ள வரவேற்பையும் உணர்ந்த மஹிந்திரா நிறுவனமும் புல்லட் சந்தையில் குதிக்கிறது. பிரிட்டனின் புகழ்பெற்ற பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள்களை விரைவில் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது மஹிந்திரா. `The Birmingham Small Arms Company Limited' என்ற பிரிட்டன் நிறுவனம்தான் இந்த ரக பைக்குகளைத் தயாரித்து வந்தது. 1950-ம் ஆண்டுகளில், உலகின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமாகத் திகழ்ந்த நிலையில், நிர்வாகக் கோளாறு காரணமாக தடாலடியாக நொடிந்துபோனது. தற்போது, அதே பிஎஸ்ஏ ரக மோட்டார் சைக்கிள்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை மஹிந்திரா பெற்றுள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ட்ரையம்ப், டுகாட்டி, பிஎம்டபிள்யூ, கவாஸாகி ரக மோட்டார் சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனினும், மஹிந்திரா நம்பிக்கையுடன் பி.எஸ்.ஏ பைக்கைச் சந்தைப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் உரிமைத்தை மஹிந்திரா 28 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

1910-ம் ஆண்டு, பிஎஸ்ஏ நிறுவனம் தன் முதல் மோட்டர் சைக்கிளைத் தயாரித்தது. நிறுவனத்தின் வளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தபோது, தற்போதைய `ட்ரையம்ப்' பிராண்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தையும் பிஎஸ்ஏ கையகப்படுத்தியது. 1970-ம் ஆண்டு, பிஎஸ்ஏ நிறுவனம் மோட்டார் சைக்கிள் உற்பத்தியை நிறுத்தியது. மஹிந்திரா வழியாக பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் மீண்டும் சந்தைக்கு வருகிறது. உலக அளவில் இந்த ரக மோட்டார் சைக்கிளைச் சந்தைப்படுத்துவதற்கான உரிமத்தை மஹிந்திரா பெற்றுள்ளது.



இருசக்கர வாகனச் சந்தைக்குள் மஹிந்திரா நிறுவனம் நுழைவது புதிதல்ல. 2008-ம் ஆண்டு கைனடிக் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 300சிசி சக்திகொண்ட மஹிந்திரா மோஜோ மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பெஜோ நிறுவனத்தின் 51 சதவிகிதப் பங்குகள் இந்த நிறுவனத்திடம்தான் உள்ளன. மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தன் ட்விட்டர் பக்கத்தில் மேலே இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், `இவ்வளவு காலமாக இந்த பைக்கை நீங்கள் ஓட்ட முடியாமல்போனதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். பழைய அம்சங்களுடன் புதிய தொழில்நுட்பமும் கலந்து மீண்டும் சந்தைக்கு வருகிறது பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள். உங்களுக்காக நாங்கள் தயாரித்து வருகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.