[ad_1]

தலைவலி, சளி, இருமல் இருந்தால், `வெந்நீர்ல ஆவிப்பிடிப்பா... சரியாப் போகும்’ என்பார்கள் வீட்டிலுள்ள பெரியவர்கள். 'நம் உடல் எவ்வளவு வியர்க்கிறதோ, அந்த அளவுக்கு விரைவில் பிரச்னை சரியாகிவிடும்' என்பதுதான் இதன் அடிப்படை. நம் உடல்நலனுக்கும் வியர்வைக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. உடல் உஷ்ணம்தான், தோலின் வியர்வைச் சுரப்பிகள் வழியாக திரவ வடிவில் வெளியேறுகிறது. சாதாரணமாக புழுக்கம், பயம், பதற்றம் போன்ற நேரங்களில் இந்தச் சுரப்பிகளின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சிலருக்கு எப்போதும் வியர்த்துக்கொண்டே இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால், அக்குள் போன்ற பகுதிகள் ஈரமாகவே காணப்படும். இந்தப் பிரச்னையை, `ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Hyperhidrosis) என்று குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு அன்றாட வேலைகளே பாதிக்கும் அளவுக்கு வியர்த்துக் கொட்டும். `இவர்களில், இரண்டு சதவிகிதம் பேர்தான் இது ஒரு பிரச்னை என்பதை உணர்ந்து, மருத்துவத்தை நாடுகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு. இதைக் கண்டுகொள்ளாமல்விடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.




ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் என்றால் என்ன, எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்குகிறார் சரும நோய் மருத்துவர் ஷ்ரதா.

பிரச்னைகள்:

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் இருப்பவர்களுக்கு வியர்த்துக்கொண்டேயிருக்கும். வியர்வைச் சுரப்பிகள், தோலின் மேற்பரப்பில்தான் இருக்கின்றன. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியாகும்போது, அவை பாதிக்கப்பட்டு அடிக்கடி சருமப் பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள், மற்றவர்கள் தங்களை என்ன நினைப்பார்கள், நினைக்கிறார்கள், உடலில் துர்நாற்றம் வீசுகிறதா என்றெல்லாம் யோசித்தபடியே இருப்பார்கள். இதனால், செய்யும் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்படும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற உளச்சிக்கல்கள் உண்டாகும்.

காரணங்கள், வகைகள்:

உடல் உஷ்ணம் அதிகமாகும்போது, நரம்பு மண்டலத்தின் தூண்டுதலால் வியர்வைச் சுரப்பிகள் தங்கள் பணியை செய்யத் தொடங்கும். அப்போது வெளியாவதுதான் வியர்வை. ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் இருப்பவர்களின் வியர்வைச் சுரப்பிகள், காரணமே இல்லாமல் நரம்பு மண்டலத்தால் அதிகமாகத் தூண்டப்படும். சிலருக்கு பிறப்பு முதலே இந்தப் பிரச்னை இருக்கும். இன்னும் சிலருக்கு பருவ வயதை அடையும்போது ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும். பருவ மாற்றத்தால் ஏற்படும் இந்தப் பிரச்னை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். இதில், பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.



* ஃபோக்கல் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் (Focal Hyperhidrosis): உள்ளங்கை, உள்ளங்கால், முகம், அக்குள் இந்த நான்கு இடங்களிலும் வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக இருக்கும். அதனால், சிலருக்கு அந்த இடங்களில் மட்டும் அதிகமாக வியர்க்கும். இந்த வகை வியர்வைப் பிரச்னை, மரபுரீதியான காரணத்தாலும் ஏற்படலாம் என்பதால், மருத்துவரீதியில் முழுமையான தீர்வு இதற்குக் கிடையாது.

* உடலின் அனைத்துப் பகுதியிலும் வியர்ப்பது, `ஜெனரல் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (General Hyperhidrosis) என்று கூறப்படுகிறது.

* `செகண்டரி ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Secondary hyperhidrosis) என்ற பிரச்னை, சில நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படும். உதாரணமாக, சர்க்கரை நோயாளிகள், மதுப்பழக்கம், புகைக்கு அடிமையானவர்கள், மூச்சுக்குழாயில் பிரச்னை உள்ளவர்கள், வாதம் இருப்பவர்கள், தைராய்டு, இதயக்கோளாறு, தொற்றுப்பாதிப்பு, நரம்பு பிரச்னை போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படலாம்.

* கை மற்றும் கால்களில் மட்டும் வியர்ப்பது, `பால்மர் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Palmar hyperhidrosis) எனப்படும்.

* அக்குள் பகுதியில் மட்டும் வியர்ப்பது, `ஆக்ஸிலரி ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Axillary hyperhidrosis) எனப்படும்.

கவலை அதிகமாக இருந்து உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நேரம்... உணர்ச்சிகள் அதிகளவில் தூண்டப்பட்டிருக்கும் நேரம்... ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் நேரங்களில் அதிகமாக வியர்க்கும். இந்தப் பிரச்னையை, மருத்துவ சிகிச்சைகளால் முழுவதுமாகச் சரிசெய்ய முடியாது. என்றாலும், இது வாழ்நாள் முழுமைக்குமான பாதிப்பாக இருக்காது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் தானாகவே சரியாகிவிடும்.

கவனிக்காமல் விடலாமா?

ஹிட்ரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களில் பலர், இதுகுறித்த விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தாலேயே, மருத்துவரை நாடாமல் இருக்கிறார்கள். பயப்படும் அளவுக்கு இது பெரிய பிரச்னை இல்லை என்றாலும், கவனிக்காமல்விட்டால்  தொடர்பான தொற்றுக்கள், தோலில் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது அதிகம் வியர்த்து, தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்.



அன்றாடச் செயல்களைச் செய்ய முடியாத அளவுக்கு வியர்த்தாலோ, வழக்கத்துக்கு மாறாக திடீரென உடல் முழுக்க வியர்த்துக் கொட்டினாலோ, இரவு தூங்கும்போது வியர்வை தாங்க முடியாமல் எழுந்துகொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டியது அவசியம். இதுபோன்ற வியர்வைப் பிரச்னைகள், சம்பந்தப்பட்ட நபரை, உளவியல்ரீதியாக பாதிக்கும். குடும்ப வாழ்க்கை, தொழில்முறை வாழ்க்கை, சிந்தனை, பொழுதுபோக்கு போன்றவற்றில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கக்கூடும்.


ஹிட்ரோசிஸ் உள்ளவர்கள் சரும நோய் நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. சிகிச்சையில் முதலில் க்ரீம், லோஷன் போன்றவை அளிக்கப்படும். பெரும்பாலும் அலுமினியம்-குளோரைடு (Aluminium Chloride) க்ரீம் வகைகள் பரிந்துரைக்கப்படும். குறிப்பிட்ட சில நேரங்களில் வியர்வைப் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்கு, போட்டாக்ஸ் (Botox) ஊசி போட்டுக்கொள்ளலாம். சிலருக்கு, `ஐயோன்டோ-ஃபோரெஸிஸ்’ (Iontophoresis) என்ற இயந்திரவழி சிகிச்சை அளிக்கப்படும்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");