[ad_1]



தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் பற்றி கதைகதையாகப் படித்திருக்கிறோம். கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் போன்றோரின் அரண்மனைகள் இன்றும் மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன. இதேபோல மெட்ராசில் ஒரு மகாராஜா வாழ்ந்தார், அவரின் அரண்மனை இன்றும் சென்னையில் இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

சென்னையில் அரண்மனையா? என ஆச்சர்யப்படுபவர்கள், அடுத்த முறை மெரினாவுக்குச் செல்லும்போது காமராஜர் சாலை சந்திப்பில் சற்றே உள்ளடங்கி இருக்கும் பழைய சிவப்பு கட்டடத்தை கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். அதுதான் சேப்பாக்கம் அரண்மனை. ஆற்காடு நவாப்பின் அதிகாரபூர்வ இல்லமாக இருந்த இந்த கட்டடத்தின் பின் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வட ஆற்காடு, தென்னாற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் ஆகிய பகுதிகளை கர்நாடக நவாப் ஆட்சி செய்து வந்தார். இவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால் இவரை ஆற்காடு நவாப் என அழைத்தனர். உலகின் பல சாம்ராஜ்ஜியங்களில் நடந்ததுபோலவே ஆற்காடு நவாப்பின் அரியாசனத்துக்காகவும் அண்ணன் தம்பிக்குள் வெட்டுக் குத்து நடந்தது. 1749-ல் வெடித்த சகோதர யுத்தத்தில் ஒரு தரப்பை பிரெஞ்சுக்காரர்களும், மற்றொரு தரப்பை ஆங்கிலேயர்களும் ஆதரித்தனர். இதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயர்கள் ஆட்டத்தில் ஜெயித்துவிட்டதால், அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற வாலாஜா நவாபான முகமது அலி ஆற்காடு அரியணையில் ஏறினார். சென்னையில் தற்போது உள்ள வாலாஜா சாலைக்கு அன்னார்தான் காரணம்.



வெள்ளைக்காரன் ஆதரவுடன் அரியாசனத்தைப் பிடித்துவிட்டாலும், நவாப்பின் கால்கள் லேசாக நடுங்கத்தான் செய்தன. தோற்றுப்போன இன்னொரு நவாப் எப்போது வேண்டுமானாலும் மீண்டு(ம்) வந்து நம்மை கபாப் போட்டுவிடக் கூடாது என ஆற்காடு நவாப் அலார்ட்டாக இருந்தார். இன்றைக்கு உயிருக்கு ஆபத்துள்ள அரசியல்வாதிகள் கமாண்டோ பாதுகாப்பு கேட்பதுபோல ஆங்கிலேயர்களிடம் பாதுகாப்பு கேட்டார். பக்கத்துல வந்துடுங்க நாங்க பாத்துக்குறோம் என்று ஜார்ஜ் கோட்டை தகவல் சொன்னதால், ஆற்காட்டை காலி செய்துவிட்டு மெட்ராசில் குடியேறத் திட்டமிட்டார்.

ஆங்கிலேயர்கள் வசிக்கும் ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே நவாபுக்காக அரண்மனை கட்டுவது என முடிவானது. அப்போதைய கவர்னர் பால்க் இதற்காக கோட்டைக்குள் நிலம்கூட ஒதுக்கிவிட்டார். ஆனால், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் கூடி நின்று கும்மி அடித்ததில், அந்த திட்டம் ஆரம்பத்திலேயே ஆட்டம்கண்டுவிட்டது. அப்படித்தான் பீச் பக்கம் கரை ஒதுங்கினார் கர்நாடக நவாப். நவாப் அரண்மனைக்காக சேப்பாக்கத்தில் 117 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது.

அரண்மனை கட்டும் பணி பால் பென்ஃபீல்ட் (Paul Benfield) என்ற கிழக்கிந்தியப் பொறியாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவர் 1768-ல் கட்டி முடித்ததுதான் பிரமாண்டமான சேப்பாக்கம் அரண்மனை. பால் பென்ஃபீல்ட் மிகச்சிறந்த பொறியாளர் என்பதால், அவரை தனக்கு கட்டடம் கட்டும் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி நவாப், 1766-ல் கவர்னருக்கு ஒரு கடிதம்கூட எழுதினார். அந்தளவுக்கு நவாப்பின் நன்மதிப்பைப் பெற்ற பென்ஃபீல்ட் அந்த பெயரைக் காப்பாற்றும் வகையில் ஒரு அருமையான கட்டடத்தை கட்டித் தந்தார். இதுதான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் இந்தோ-சராசனிக் பாணி கட்டடம். இதில் இரண்டு பிளாக்குகள் இருந்தன. தெற்கில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் கலஸ் மஹால் என்றும், வடக்கில் இருந்த ஒற்றை மாடிக் கட்டடம் ஹூமாயுன் மஹால் என்றும் அழைக்கப்பட்டது.



ஆடம்பரப் பிரியரான நவாப் முகம்மது அலி, அந்தக் கால விஜய் மல்லையா மாதிரி கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். இதனிடையே 1795-ல் நவாப் முகம்மது அலி இறந்துவிட, அவரது மகன் உம்தத்-உல்-உம்ராவின் தலையில் கடன் சுமை இறங்கியது. இதுபோதாதென்று 1799-ல் சீரங்கப்பட்டினம் போரில் மைசூர் சுல்தானுடன் சேர்ந்துகொண்டு உம்தத்-உல்-உம்ரா சதி செய்த செய்தி வெளியானதும் கடுப்பாகிப் போன கிழக்கிந்திய கம்பெனி நவாப்பிடம் இருந்து கர்நாடக ஆட்சி அதிகாரத்தைப் பறித்துக்கொண்டது. நாடாற்ற நவாப்பாகிப் போன கவலையிலேயே அவர் தனது 53-வது வயதில் காலமாகிப் போனார். அதன்பின் சில பல அரசியல் திருப்பங்களை அடுத்து, 50 ஆண்டுகள் கழித்து 1855-ல் பிரிட்டிஷ் அரசு சேப்பாக்கம் அரண்மனையை ஏலம் விட்டது. ஆனால், இதை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு யாரிடமும் பணம் இல்லை. எனவே, அரசே இதை கையகப்படுத்தி, அரசு அலுவலகமாக மாற்றிவிட்டது. அன்றில் இருந்து இன்று வரை சேப்பாக்கம் அரண்மனை அரசு அலுவலகமாகத்தான் இருக்கிறது. இதனிடையே நாடு இல்லாத நவாப்புகளான வாரிசுகள் சேப்பாக்கம் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டதுதான் தற்போது ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால்.

இதனிடையே 1860-ல், பிரபல கட்டடக் கலைஞரான ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Fellowes Chisholm) ஹூமாயுன் மற்றும் கலஸ் மஹால்களுக்கு இடையில் ஒரு கோபுரத்தை நிர்மாணித்தார். கர்நாடகப் பகுதி முழுவதையும் பிரிட்டீஷார் கைப்பற்றியதன் நினைவாக இது எழுப்பப்பட்டது. பின்னர் சிஸ்ஹோம், அரண்மனைக்கு முன்புறம், ஸ்காடிஷ் பாணியிலான பொதுப்பணித் துறை கட்டடம், வாலாஜா சாலையைப் பார்த்தபடி, இந்தோ-சராசனிக் பாணியிலான ஆவணக் காப்பகம் மற்றும் வருவாய்த்துறை கட்டடங்களைக் கட்டினார். இதனால் சேப்பாக்கம் அரண்மனை இந்த கட்டடங்களுக்குள் மறைய ஆரம்பித்தது. பின்னர் 1950களில் இப்போதைய எழிலகம் கட்டப்பட்டதும் கொஞ்ச நஞ்சம் தெரிந்த அரண்மனையும் முற்றிலுமாக மறைந்துவிட்டது.




ஒருகாலத்தில் இன்றைய திருவல்லிக்கேணி காவல்நிலையம்கூட சேப்பாக்கம் அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறுகிறார்கள். குதிரைக்காரர்களுக்கும், விருந்தினர்களின் உதவியாளர்களுக்கும் உணவு பரிமாறும் இடமாக அது இருந்ததாம். அந்தளவுக்கு பரந்துவிரிந்து இருந்திருக்கிறது நவாப்பின் ஆடம்பர சேப்பாக்கம் அரண்மனை. இப்போதுமட்டும் நவாப் உயிருடன் இருந்திருந்தால் உல்லாசமாக பீச்சில் உலா வந்துவிட்டு, அருகில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சுற்றமும், நட்பும் சூழ ஜாலியாக கிரிக்கெட் பார்த்திருப்பார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");