[ad_1]
‘வாழ்க்கை, கையில் வைத்திருக்கும் முட்டையைப் போன்றது. அதை பத்திரமாகக் கையாள வேண்டும்’ என்ற ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. இது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய பழமொழிதான். சமயத்தில், சக மனிதர்களைத் தாண்டி, பிற உயிர்கள் மீது அன்பு பாராட்டுகிறவர்களுக்கும் இது பொருந்திப்போகும். அதுதான் நம்மை வருத்தப்படவைக்கும் செய்தி. இயற்கையை நேசிக்கிறவர்கள், வன விலங்குகளைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடுகிறவர்கள், அருகிவரும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை மீட்பவர்கள்... இவர்களில் பலர், உயிரிழந்த செய்திகளைக் கேள்விப்படுகிறோம்... அதிலும் அவர்கள் சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபட்டிருக்கும்போதே அவர்கள் உயிர் பறிபோவது பரிதாபம். ஸ்டீவ் இர்வின் (Steve Irwin) கதை அந்த ரகத்தைச் சேர்ந்தது. தன் வாழ்நாளெல்லாம் பல்லி, உடும்பு, பாம்பு, முதலை போன்ற உயிரினங்களின் மேல் தீராக் காதல் கொண்டு, அவற்றின் காவலனாக விளங்கியவர் ஸ்டீவ். அவரை `முதலை வேட்டைக்காரர்’ (The Crocodile Hunter) என்றுதான் செல்லமாக அழைத்தார்கள். அவர், ஒரு மீனால் உயிரிழந்தார் என்றால் நம்ப முடிகிறதா? அந்த உண்மைக் கதையைப் பார்ப்போம்...
(Photo courtesy: www.australiazoo.com)
அவருடைய முழுப் பெயர் ஸ்டீபன் ராபர்ட் இர்வின். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகில் எஸ்ஸென்டென் (Essendon) என்ற இடத்தில் 1962-ம் ஆண்டு பிறந்தார். 1970-ல் அவர் குடும்பம், குயின்ஸ்லேண்டுக்கு அருகிலிருக்கும் பியர்வா (Beerwah) என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தது. அங்கே `பியர்வா ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க்’ (Beerwah Reptile and Fauna Park) என்ற ஒரு ஜூவை ஆரம்பித்து நடத்தினார்கள் ஸ்டீவின் அப்பாவும் அம்மாவும். அந்த உயிரியல் பூங்காவில் இருந்தவையெல்லாம் ஊர்வன வகையைச் சேர்ந்தவை. அவற்றோடு வாழ்ந்ததாலேயோ என்னவோ, ஸ்டீவுக்கு பல்லி, முதலை, பாம்புகள் மேலெல்லாம் அலாதியான அன்பு. அவற்றின் உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ளும் விசித்திரமான அறிவு அவருக்கு இருந்தது. ஸ்டீவ், விஷமுள்ள பாம்பு ஒன்றை முதன்முதலாகப் பிடித்தபோது அவருக்கு ஆறு வயது.
பள்ளிக்குச் செல்லும் மாணவனுக்கு வேறு என்ன வேலை இருக்கப் போகிறது? வீட்டிலிருந்து கிளம்பினால் ஸ்கூல். ஆனால், ஸ்டீவ் பல நாள்கள் தாமதமாகப் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். விஷயம் அவரின் அம்மா காதுக்குப் போனது. அன்றைக்கு அம்மா விசாரித்தபோது, ஸ்டீவ் சொன்னார்... “நடு ரோடும்மா. ஓணான் ஒண்ணு ரோட்டுல கால்ல அடிபட்டுக் கிடந்துச்சு. அதை அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா? அதான்... அதை எடுத்துட்டுப் போயி, பத்திரமா நிறைய மரங்கள் இருக்குற இடத்துல விட்டுட்டு வந்தேன்...’’
அப்போது ஸ்டீவுக்கு ஒன்பது வயது. அப்பாவோடு அவர் பார்த்த வேலை என்ன தெரியுமா? ஆற்றில் படகுகள் மீது மோதி தள்ளி, தொந்தரவு தரும் முதலைகளைப் பிடிக்கும் வேலை. வளர வளர முதலை போன்ற உயிரினங்களின் மீதான காதல் அவருக்கு அதிகமானது. முதலைகளை மீட்டுப் பராமரிக்கும் அமைப்பில் தன்னார்வலரானார். அடர்ந்த காடுகளுக்குள் சென்று மாதக்கணக்கில் பழியாகக் கிடந்தார். மற்றவர்களின் கைக்குச் சிக்கும் நிலையில் இருந்த பல முதலைகளை மீட்டார். அவற்றில் வழிதவறி வந்த பல முதலைகளை அவற்றின் இருப்பிடத்தில் பத்திரமாகச் சேர்த்தார்; சிலவற்றை தன்னுடைய குடும்பம் நடத்தும் உயிரியல் பூங்காவுக்கு எடுத்துப் போய் காப்பாற்றினார். அப்படி அவர் மீட்ட முதலைகளின் எண்ணிக்கை 100-க்கும் மேலிருக்கும்.
முதலைகளை அவர் கையாண்ட வழிமுறைகளைத்தான் உலகின் பிரபல முதலை வேட்டைக்காரர்கள் இன்று பின்பற்றுகிறார்கள். அவருடைய குடும்பம் நடத்திய உயிரியல் பூங்கா, `குயின்ஸ்லேண்ட் ரெப்டைல் அண்ட் ஃபானா பார்க்’ என்று 1980-ம் ஆண்டு அழைக்கப்பட்டது. ஆனால், ஸ்டீவ் அதை `வீடு’ என்றுதான் அழைப்பார். 1991-ம் ஆண்டிலிருந்து அந்த பூங்காவை ஸ்டீவே நிர்வகிக்க ஆரம்பித்தார். அதற்கு `ஆஸ்திரேலியா ஜூ’ (Australia Zoo) என்று பெயரும் வைத்தார். அதே ஆண்டுதான் அமெரிக்காவிலிருந்து சுற்றிப் பார்க்க வந்த டெர்ரி ரெயின்ஸ் (Terri Rains) என்பவரைப் பார்த்தார். பார்த்ததும் காதல்... பிறகு அது திருமணத்தில் முடிந்தது.
திருமணம் முடிந்ததும் தேன்நிலவுக்குப் போவார்கள் இல்லையா? ஸ்டீவும் டெர்ரியும் போன இடம் காடு... இருவரும் சேர்ந்து முதலைகளைத் தேடிப்போனார்கள். அந்த அனுபவத்தை `தி குரோக்கடைல் ஹன்ட்டர்’ என்ற ஆவணப் படமாக எடுத்தார்கள். அது தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பானது. இதுபோல வனவாழ் உயிரினங்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் பல ஆவணப்படங்களை இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள். குரோக் ஃபைல்ஸ் (Croc Files), `தி குரோக்கடைல் ஹன்ட்டர் டயரீஸ்’ இவையெல்லாம் மிக முக்கியமானவை; லட்சக்கணக்கானவர்களின் ஆதரவைப் பெற்றவை. கடல்வாழ் உயிரினங்கள், நத்தைகள், கடல் பாம்புகள், சுறா மீன்கள், ஆக்டோபஸ், உப்பு நீர்ல் வாழும் முதலைகள், விஷமுள்ள ஜெல்லி மீன்கள்... எனத் தேடித் தேடி படம் பிடித்தார் ஸ்டீவ். ஒருமுறை, ஒரு பேட்டியில் ``நான் பார்த்ததுலயே பெரிய பாம்பு, ஸ்டோக்ஸ்தான் (Stokes Sea Snake) ரொம்பப் பெருசு’’ என்று வியந்து சொல்லியிருக்கிறார் ஸ்டீவ்.
ஸ்டீவ்-டெர்ரி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தபோது, தன் மகளுக்கு அவர் வைத்த பெயர் `பிண்டி’ (Bindi). `பிண்டி’ என்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு முதலையின் பெயர். அதற்குப் பிறகு ஓர் ஆண் குழந்தை அவர்களுக்குப் பிறந்தது. `ராபர்ட்’ என்று பெயர்வைத்தார்கள்.
அது 2006-ம் ஆண்டு. ஆஸ்திரேலியாவின், பேட் ரீஃப் (Batt Reef)-க்கு அருகே கடலுக்கு அடியில் ஓர் ஆவணப் படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. நம் ஊரில் `திருக்கை மீன்’ என்று சொல்வோம். அங்கே `ஸ்டிங்ரே’ (Stingray) என்று சொல்வார்கள். வாலிருக்கும் பகுதியில் நீளமான கொடுக்கு ஒன்று அதற்கு இருக்கும். கிட்டத்தட்ட 2 மீட்டர் நீளம் கொண்டது. திடீரென்று எங்கிருந்தோ வந்த அந்த மீன், சில நொடிகளில் அவரைத் தன் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் அவருடைய இதயம் இருக்கும் பகுதியில். படக்குழுவினர் அவரை மீட்டு, கடற்கரைக்குக் கொண்டுவந்தார்கள். அதற்குள் ஸ்டீவ் இறந்துபோயிருந்தார்.
மனிதனைத் தவிர பிற உயிரினங்களுக்குப் பிரத்யேகமான ஓர் உணர்வு உண்டு. அந்நியர்களிடமிருந்து எப்போதும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் `அலெர்ட்’ உணர்வு. கங்காருக் குட்டி, தாயின் மடிக்குள் தாவி உட்கார்ந்துகொள்வதும், ஆமைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியே வந்ததும் தன் தாயிருக்கும் கடலை நோக்கிச் சரியாக நகர்ந்து போவதும் அதனால்தான். அந்த ஸ்டிங்ரே மீனுக்கு ஸ்டீவைப் பற்றித் தெரியாது. அதைப் பொறுத்தவரை, ஸ்டீவ் ஓர் அந்நியன். அதனால் தாக்கியிருக்கிறது. அவருடைய மனைவி டெர்ரி ரெயின்ஸ்தான் இப்போது உயிரியல் பூங்காவைப் பார்த்துக்கொள்கிறார். மகன், ராபர்ட்டுக்கு அப்பாவைப்போலவே பல்லி, பாம்பு, முதலைகள் போன்ற ஊர்வனவற்றின் மேல் அலாதிக் காதல். அவற்றின் பின்னால் அப்பாவைப்போலவே ஓடிக்கொண்டிருக்கிறார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
100-க்கும் மேற்பட்ட முதலைகளைக் காப்பாற்றிய ஸ்டீவ் இர்வின்! ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
TAGS :
COMMENTS