[ad_1]





Ramanathapuram: மாவட்ட ஆட்சியர் அலுவலகமே டெங்கு கொசு உற்பத்தித் தளமாக மாறிய அவலம்குறித்த வீடியோ பதிவு, vikatan emagazine-ல் வெளியான சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 




ராமநாதபுரம் மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாத நிலையிலும் தேங்கிக்கிடக்கும் குப்பைகள், சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டிகள், குவிந்துகிடக்கும் டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களில் தேங்கிக்கிடந்த தண்ணீரால் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகிவந்தன. இதனால், மாவட்டத்தில் பலர் டெங்கு, வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

 


இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நடராஜன், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வை மேற்கொண்டுவருகிறார். இந்த ஆய்வின்போது, டெங்கு கொசுக்களை உற்பத்திசெய்யும் வகையில் சுகாதாரமற்ற நிலையிலும் கொசுக்கள் வளர ஏதுவாகத் தண்ணீரை தேக்கிவைத்திருக்கும் நிலையில் உள்ள இடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துவருகிறார்.




இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கிவரும் பிரதான கட்டடத்தின் மேல்புறம், டெங்கு கொசுக்களை உற்பத்திசெய்யும் வகையில் இருந்துவந்தது. ஆட்சியர் அலுவலகத் தகவல்தொடர்பு வசதிக்காக இங்கு வைக்கப்பட்டிருந்த (பயன் படாத) டிஷ் ஆன்டனாவில் மழை நீர் தேங்கிய நிலையில், அதில் ஆயிரக்கணக்கான டெங்கு கொசுக்கள் உற்பத்தியான நிலையில் காணப்பட்டது.  இதுபற்றிய வீடியோ பதிவு, விகடன் e magazine-ல் இன்று காலை வெளியானது. இதைக் கண்ட பார்வையாளர்கள், தனியார் கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கும் ஆட்சியரின் அலுவலகமே டெங்கு கொசு பரப்பும் நிலையில் இருப்பதற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டனர்.

 
 


இதுபற்றிய தகவல் வெளியாகவே, ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக மாடிப் பகுதிக்குச் சென்று, கொசு உற்பத்தித் தளமாக இருந்த டிஷ் ஆன்டனாவை சுத்தம்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மழை நீர் தேங்கியிருந்த டிஷ் ஆன்டனாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்