[ad_1]



அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த ஓ.பி.எஸ். அணி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எடப்பாடி அணியுடன் இணைந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கொஞ்சம் பிரச்னையின்றிச் சென்றுகொண்டிருந்தது. அணிகள் இணைந்ததால், இரட்டை இலைச் சின்னம் கிடைப்பதிலும் சுமுகமான நிலை தென்பட ஆரம்பித்தது. இப்படிக் கட்சி கொஞ்சம் மூச்சுவிடத் தொடங்கியிருந்த நிலையில், இப்போது ஒரு முகநுால் பதிவு, கட்சியில் நிலவிவரும் பிரச்னையை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது. ஏற்கெனவே அணிகள் இணைப்புக்குப்பின் ஓ.பி.எஸ். அணிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கீழ்மட்ட நிர்வாகிகள் சார்பில் அவ்வப்போது பேசப்பட்டன. இந்நிலையில்தான் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணியினரிடையே நிலவிவரும் பூசலை உலகுக்குச் சொல்லியுள்ளது இந்த முகநுால் பதிவு.  பதிவுக்குச் சொந்தக்காரர் இரு அணிகளின் இணைப்பில் முக்கியத்துவம் வகித்த மைத்ரேயன் எம்.பி என்பதால், விவகாரம் இன்னும் பரபரப்பாகியிருக்கிறது. 




தமிழக முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்., கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி முன்னறிவிப்பின்றி ஜெயலலிதாவின் சமாதிக்கு மாலை 7 மணிக்கு வந்தார். சமாதி முன் தியானம் செய்தார். இதையடுத்து மீடியாக்கள் சென்னை மெரினாவை முற்றுகையிட்டன. “என் மனசாட்சி என்னை உறுத்தியதால் இங்கு வந்தேன். ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, 'கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்றும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக மதுசூதனன் இருக்க வேண்டும் என்றும், முதலமைச்சராக என்னைப் பொறுப்பேற்க வேண்டும்' என்றும் ஜெயலலிதா என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் மறைவுக்குப் பின்னர், நான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன். தலைமைச் செயலகத்தில், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென்று, தலைமைக் கழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, போயஸ் கார்டனுக்குச் சென்றேன். அங்கு, அனைத்து அமைச்சர்களும், சசிகலாவின் குடும்பத்தினரும் அமர்ந்திருந்தனர். என்னை அமரச் சொன்னார்கள். 'முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்' என்று என்னிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். 'அம்மா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்துவிடுகிறேன்... வந்தபின்பு ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடுகிறேன்' என்று நான் சொன்னபோது, அதற்குக்கூட என்னை அனுமதிக்காமல், மிரட்டி என்னிடம் கையெழுத்து வாங்கினர். மேலும், பலமுறை என்னை அவமானப்படுத்தினார்கள்" என்றார். 

இந்தப் பேட்டியை அடுத்து, கட்சி இரு அணிகளாயின. ஓ.பி.எஸ். அணிக்கு கணிசமான எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வந்து இணைந்தனர். அப்போது அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் தனித்தனியாகக் களம் இறங்கியதால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தனித்தனிச் சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதனிடையே, சின்னத்தைப்பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் சிறைக்குச் செல்ல, எடப்பாடி பழனிசாமி சசிகலா குடும்பத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். தினகரன் தரப்பு தந்த நெருக்கடி,  இரு அணிகளும் இணைந்தாகவேண்டிய கட்டாயத்தை இருதரப்புக்கும் ஏற்படுத்தியது. இதனால் இணைப்பு முயற்சிக்கு இரு அணிகளும் இறங்கிவந்தன. ஒரு சுமுகமான நிலை ஏற்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ். அணி விதித்த நிபந்தனைகளால் சற்று தேக்கம் உருவானது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து, இரு அணிகளும் இணைப்பு முயற்சியில் வேகம் எடுத்தன. ஒருகட்டத்தில், அவசர அவசரமான ஓ.பி.எஸ். அணியின் 2 கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்து அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியை இணைத்துக்கொண்டது எடப்பாடி தரப்பு. கடந்த மூன்று மாதங்களாக ஆட்சி கொஞ்சம் பிரச்னையின்றிச் சென்றுகொண்டிருந்தது. அணிகள் இணைந்ததால், இரட்டை இலை கிடைப்பதிலும் சாதகமான நிலை தென்பட ஆரம்பித்தது.  

இந்நிலையில்தான், “ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்., அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் நிறைவுற்று இன்றோடு நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடிவிட்டன. மனங்கள்...” என தனது முகநூலில் ஒரு பதிவைப் போட்டுப் பற்றவைத்திருக்கிறார் மைத்ரேயன். 

முகநூல் பதிவு குறித்து மைத்ரேயன் எம்.பி-யிடம் பேசினோம்.“என் மனசில் பட்டதைத்தான் பதிவாகப் போட்டேன். இதை அதிருப்தி என்று நீங்கள் சொன்னால் நான் அதற்குப் பொறுப்பல்ல... இது, தனிப்பட்ட என் ஒருவனது குரலும் அல்ல... எங்கள் அணியைச் சேர்ந்த ஒட்டுமொத்த அடிமட்டத் தொண்டனின் குரல். கட்சியில் தனி அணியாக நாங்கள் செயல்பட ஆரம்பித்தபின் நாங்களாக வந்து இணையவில்லை. அவர்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்ற அவர்கள்தான் இறங்கிவந்தார்கள். எங்கள் கோரிக்கையை ஏற்றதால் இணைந்தோம். நாங்கள் இணைந்தபிறகுதான் தினகரன் தந்த பெரிய அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டார்கள். ஆட்சியையும் காப்பாற்ற முடிந்தது. ஆட்சியைக் காப்பாற்றிய எங்களுக்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. கட்சியில் இணைந்து நான்கு மாதங்கள் ஆனநிலையிலும் எங்களுக்குத் தந்த வாக்குறுதிகள் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. உரிய அங்கீகாரமோ... மரியாதையோ வழங்கப்படவில்லை. 

எம்.பி.  பதவி என்பது எனக்கு எடப்பாடி பழனிசாமி தந்தது அல்ல... ஜெயலலிதா தந்தது. அதைத் தாண்டி எந்தப் பொறுப்பும் கடந்த மூன்று மாதங்களில் எனக்கு வழங்கப்படவில்லை. இன்றுவரை நான் கட்சியில் சாதாரண அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல, எங்கள் அணியின் ஒவ்வொருவரிடம் உள்ள பதவிகளும் பொறுப்பும் ஜெயலலிதா காலத்திலேயே எங்களுக்கு அளிக்கப்பட்டவை. கட்சியில் இணைந்தபின் யாருக்கும் எதுவும் தரப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியை நம்பி வந்த நாங்கள் நடுத்தெருவில்தான் நிற்கிறோம். பேச்சுவார்த்தையில் பேசப்பட்டவை அப்படியே கிடப்பில் இருக்கின்றன.



கட்சியில் இணைந்த எங்களுக்கு எந்தவித அங்கீகாரங்களும் அளிக்கப்படவில்லை. பதவி, பொறுப்பு, அதிகாரம் என அவர்கள்தான் எல்லா விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அதனால்தான் அப்படியொரு பதிவைப் போட்டேன். பூனைக்கு யார் மணி கட்டுவது என மற்றவர்கள் தயங்கி நின்றனர். நான் துணிந்துவிட்டேன். அவ்வளவுதான்... மற்றபடி, இது கலகம் செய்வதோ... புரட்சியோ அல்ல. எங்களின் ஆதங்கம் அவ்வளவுதான்” என்றவர், ''கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் நீங்கள், கட்சியின் இணைப்பில்  ஓ.பி.எஸ்ஸுக்கு அடுத்ததாக முக்கியப் பொறுப்பு வகித்தவர் நீங்கள். இதனால் இந்த விவகாரம் நீங்கள் ஏற்ற தலைமையினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என எடுத்துக்கொள்ளலாமா'' என்றோம். “அப்படிக் கிடையாது. இது, தொண்டர்கள் சார்பாக என்னிடமிருந்து வெளிப்படும் ஆதங்கம் அவ்வளவுதான். இந்த வாரத்தில் எங்களுக்கு இரட்டை இலை மீண்டும் கிடைத்துவிடும். அதன் தொடர்ச்சியாக என் அடுத்த பதிவு இருக்கும்” என முடித்துக்கொண்டார்.

கவர்னரின் தனி ஆவர்த்தனம், பாஜகவின் முன்னாள் சகாவின் முகநுால் பதிவு இவற்றை முடிச்சுப்போட்டுப்பேசும் விவரமறிந்த வட்டாரம், பரபரப்பான தமிழக அரசியல் களத்தின் இரண்டாம் பாகம் தொடங்கலாம் என்கிறார்கள்


மீண்டும் அம்மா சமாதி தூசிதட்டப்படும்போல!

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");