[ad_1]

கேரளாவில், மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பின் 85 நாள் சிறையிலிருந்த பிறகு, கடந்த மாதம் திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதே வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக மேலும் ஒரு குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். நடிகர் திலீப் ஜாமீனில் வெளிவரும் முன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென போலீஸார் தீவிரமாக இருந்தனர்.



ஆனால், திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால், அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகையைத் தாக்கல்செய்ய காலதாமதம் ஆகிவிட்டது. இந்த வழக்கில், நடிகர் திலீப் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கேரள டி.ஜி.பி லோக்நாத் நெக்ரா தெரிவிக்கும்போது, நடிகர் திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி முடிந்துவிட்டது. தற்போது அதைப் பரிசீலிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. குற்றப் பத்திரிகையில் அவர் எத்தனையாவது குற்றவாளியாகச் சேர்க்கப்படுவார் என இதுவரை முடிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகை இன்னும் இரண்டு நாள்களில் தாக்கல்செய்யப்பட இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.