[ad_1]





ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ராஜராஜேஸ்வரி ஹோட்டலில் பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் விற்கப்படுவதாக டி.ஜி.பி-க்கு வந்த தகவலை அடுத்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் டீம் அந்த ஹோட்டலைச் சுற்று வளைத்து மரகத லிங்கம் வைத்திருந்த கும்பலை நேற்று கைது செய்தது.




அவர்கள் இருந்த அறையில் 3 இன்ச் மரகத லிங்கமும் 1 1/2 இன்ச் மரகத நந்தியும் கைப்பற்றியுள்ளனர். இந்த மரகத லிங்கத்தையும் நந்தியையும் இவர்கள் ரூபாய் 7 கோடிக்கு விற்பனை செய்ய பேரம் பேசி இருக்கிறார்கள்.
இதுபற்றி பொன் மாணிக்கவேல், ''நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிலைகள் திருட்டு போனது. இந்தச் சிலையைக் கொள்ளையடித்து சென்றவர்கள் விற்க முடியாமல் பல கைகள் மாறின. இறுதியாக ஈரோட்டைச் சேர்ந்த கஜேந்திரன், சந்திரசேகரன் மற்றும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மணிராஜ் இவர்கள் இந்தச் சிலையை விற்கயிருந்தார்கள்.



இந்தத் தகவல் கிடைத்ததை அடுத்து இவர்களைச் சுற்றி வளைத்து மரகத லிங்கத்தையும் மரகத நந்தியையும் மீட்டிருக்கிறோம். இந்தச் சிலைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். மீட்கப்பட்ட இந்தச் சிலைகள் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்'' என்றார்.


இதையடுத்து, தொடர்ந்து பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர இருக்கிறார்கள். இதில் சில போலிச் சாமியார்களும் மாட்டப் போவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்துள்ளார்கள். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்