[ad_1]
பிரசவம்... புதிய உயிர் பூமியில் சஞ்சரிக்கும் உன்னத நிகழ்வு. பிரசவத்தின்போது, ஏற்படும் வலி, வேதனையைக் கடந்து, செத்துப் பிழைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும், அது மறுபிறப்பு. மருத்துவத்துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம்முடைய முந்தைய தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியிருக்கும் இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களைச் சாத்தியமாக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கக் கூடிய செய்தியே.
‘தாய்-சேய் நலனை கருத்தில்கொண்டு மருத்துவக் காரணங்களுக்காக, 15 சதவிகிதம் வரை மட்டுமே அறுவைசிகிச்சைப் பிரசவங்களை அனுமதிக்கலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், சமீபத்தில் வெளியாகும் புள்ளிவிவரங்கள் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
மத்திய அரசின் குடும்ப நலம்-சுகாதார அமைச்சகத்தின் தேசியக் குடும்பநல ஆய்வு (National Family Health Survey) அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் குறித்து 2015-16-ம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளைச் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் சராசரியாக 17.2 சதவிகிதம் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடக்கின்றனவாம். இதுவே, 1992-93-ம் ஆண்டில் 2.9 சதவிகிதமும், 1998-99-ம் ஆண்டில் 7.1 சதவிகிதமும், 2005-06-ல் முறையே 8.5 சதவிகிதம் என்ற அளவில் இருந்திருக்கிறது. அதேபோல, தேசிய அளவில் 40.9 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளிலும் 11.9 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் நடப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்த பிரசவங்களில் 34.1 சதவிகிதம் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 51.3 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளிலும் 26.3 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பதாக அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் கிராமப்புறங்களில் 32.3 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 36.1 சதவிகிதமாகவும் உள்ளன என்கிறது அந்த ஆய்வு.
“சில அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது. என்றாலும், பல மருத்துவமனைகள், பிரசவத்திலும் பணம் பார்க்கும் நோக்கில் செயல்படுவதும் இதற்கு முக்கியக் காரணம்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். “சில தனியார் மருத்துவமனைகள் வணிக நோக்கில் செயல்படத் தொடங்கியதன் விளைவாக, பிரசவம் என்றாலே, சிசேரியன்தான் என்று ஆகிவிட்டது" என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவர்கள், `பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் பெண்களில் பெரும்பாலும் சிசேரியனையே விரும்புகிறார்கள். பிரசவவலியைத் தவிர்க்கவோ அல்லது தங்கள் குழந்தை நல்ல நாளில், நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்ற ஜோதிட நம்பிக்கைக்காகக்கூட இந்த மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்கிறார்கள் அவர்கள்.
`உண்மையில், சிசேரியன் முன்பைவிட, தற்போது அதிகரிக்க என்ன காரணம், சிசேரியன் செய்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன?’ மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜிடம் கேட்டோம்...
"பொதுவாக, பிரசவத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும். எல்லா மருத்துவமனைகளிலும் சுகப்பிரசவம் நடக்காமல் இருப்பதில்லை. முன்பைவிட தற்போது குறைந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில் சுகபிரசவத்தின்போது நடக்கும் குழந்தை இறந்துபோவது, தாய் இறந்துபோவது முற்றிலும் இப்போது தடுக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் கவனத்தில்கொள்ளாமல், சிசேரியன் பிரசவம் அதிகரிப்பதற்கு மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் குறைசொல்லும் போக்கு இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. விதிவிலக்காக, சில இடங்களில் அப்படி நடக்கலாம். மற்றபடி அதில் முழுவதும் உண்மையில்லை. ஏனெனில், சுகப்பிரசவம் எல்லாப் பெண்களுக்கும் சாத்தியமாவது இல்லை. முதலில், சிசேரியன் முறை அதிகரிக்க வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்களே முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். குறிப்பாக, திருமண வயதைத் தள்ளிப் போடுவதும், செயற்கைக் கருவுறுதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் சில பிரசவங்களில் 'சிசேரியன்' அவசியமாகிறது.
நவீன கருவிகளும், வசதிகளும் அதிகரித்துவிட்ட நிலையில், 'சிசேரியன்' முறை வேகமாகவும் எளிதாகவும் செய்யக்கூடியதே. இப்போதெல்லாம் குறையுள்ள குழந்தைப் பிறப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று உலகளவில் மருத்துவத் துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில்தான் சிசேரியன் அதிகரித்திருக்கிறது. போதிய அளவு முன்னேற்றமடையாத நாடுகளில்தான் இது குறைவாக இருக்கிறது. இந்த நாடுகளில்தான் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய தாய், சேய் இறப்பு விகிதம் குறைவாக இருக்கின்றன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சில பிரச்னைகள் ஏற்படலாம் என்றாலும், அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல.
பெண்களுக்குத் தங்கள் பிரசவம் குறித்து முடிவெடிக்கும் உரிமை இருப்பதால், பெண்களே தீர்மானிக்கலாம். இதில் வலிக்கு பயந்தும் சிசேரியன் முறையைச் சில பெண்கள் நாடுகின்றனர். அதோடு சில தம்பதிகள் பிறக்கப்போகும் குழந்தை, ஜோதிட அடிப்படையில் நல்ல நாள், நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆடி மாதத்தில் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்பதற்காக, அதற்கு முன்னரே சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். தாய்-சேய் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் சிசேரியனுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களுக்காக நடைபெறும் சிசேரியன்கள் தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் முன்கூட்டியே தேதியைக் குறித்துவைத்து, குழந்தையை வெளியே எடுக்கும்போது, குழந்தை போதுமான வளர்ச்சியடையாமல் இருக்கும் நிலை ஏற்படலாம். இப்படி சிசேரியன் செய்துகொண்ட சில தாய்மார்களுக்குப் போதுமான அளவு பால் சுரக்காது அல்லது பால் சுரக்க பல நாள்கள் ஆகும். முதல் பிரசவம், சிசேரியன் என்றால், அடுத்ததும் அதேபோல்தான் இருக்கும் எனக் கூற முடியாது. அறுவைசிகிச்சைதான் தேவைப்படும் என்ற அறிகுறி தென்படாத வரை, சுகப்பிரசவமும் ஏற்படலாம்" என்கிறார் ஜெயராணி காமராஜ்.
இந்தியாவில் நடக்கும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் (மாநிலங்கள் வாரியாக)
load
எந்தெந்தச் சமயங்களில் சிசேரியன் மூலம் குழந்தைப்பேறு பெறுவது கட்டாயமாகிறது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜிடம் கேட்டோம்.
"அந்தக் காலங்களில் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கைமுறையே உடற்பயிற்சியாக மாறி சுகப்பிரசவத்துக்கு உதவின. இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலை குறைவாக இருக்கிறது. இதுபோன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அதிகரித்து வருவதுதான் அறுவைசிகிச்சை பிரசவங்களுக்கு அடிப்படையான காரணம்" என்றவர், வேறு எந்தெந்தச் சூழலில் சிசேரியன் அவசியமாகிறது என்பதையும் விளக்குகிறார்.
"தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால், குழந்தை அந்த மாதத்துக்கேற்ற வளர்ச்சியடையாமல் இருந்தால் (Intrauterine growth restriction (IUGR), ஆரம்பப் பிரசவவலியின்போதே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிசேரியன் தேவைப்படும்.
பிரசவ நாளுக்கு இரண்டு வாரத்துக்கு முன்பே தாயின் இடும்பெலும்புக்குள் கர்ப்பப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையின் தலை நுழைந்துவிட வேண்டும். தாயின் இடுப்பெலும்பு சிறியதாக இருந்து, குழந்தையின் தலை பெரிதாக இருந்தால் குழந்தையின் தலை இடுப்பெலும்புக்குள் நுழையாது. இந்தச் சூழலிலும், பனிக்குடம் உடைந்து பிரசவவலி இல்லாத நிலையில் வலியைத் தூண்டிவிட மருந்து கொடுத்தும் வலி வராத நிலையிலும் சிசேரியன் தேவைப்படும். பனிக்குடம் உடைந்த 6 - 8 மணி நேரம் வரை பிரசவவலி அதிகமாக இருந்தும் பிரசவம் ஆகவில்லை என்ற நிலை, நஞ்சுப் பிரசவப் பாதையில் அமைந்திருந்தால் குழந்தை வெளிவர இயலாது. இதுபோன்ற சூழல்களிலும் சிசேரியன் செய்வது அவசியம்.
கர்ப்பப்பை அல்லது கருவகத்தில் கட்டி, பிரசவப் பாதையில் கட்டி, பிரசவத்தில் சிக்கல், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், வலிப்பு நோய் ஆகியவற்றால் தாய் பாதிக்கப்பட்டிருக்கும்போது, குழந்தைக்குப் பிராண வாயு குறைந்துவிட வாய்ப்பிருக்கும் நிலையில், குழந்தை படுத்திருக்கும் நிலை சரியாக இல்லாமல் இருந்தால், உதாரணமாகக் குறுக்கே படுத்திருந்தால், கர்ப்பப்பை அடி இறங்கி அதனை நிறுத்த ஆபரேஷன் செய்திருந்தால்... சிசேரியன் செய்ய வேண்டும்.
தாய்க்கு இதயக்கோளாறு, கர்ப்பப்பை வாயில் புற்றுநோய், இயற்கைக்கு மாறாக யோனிக் குழாய் இருந்தால், யோனிக்குழாயின் அமைப்புச் சரியாக இல்லாமலிருந்தால், குழந்தையே இல்லாமல் செயற்கை முறையில் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தையாக இருந்தால்... இதுபோன்ற தாய்-சேய் ஆகிய இருவருக்கும் ஏற்படும் உயிர் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக சிசேரியன் தேவை அவசியப்படும்.
அடிக்கடி குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து பிறக்க நேரிட்டால் நிறை மாதத்துக்கு முன்னரே சிசேரியன் செய்ய பரிந்துரைக்கப்படும். முதல் பிரசவம் சிசேரியனாக இருக்குமானால், பிரசவவலியின் அவஸ்தையால் கர்ப்பப்பை தையல் விட்டுப்போக வாய்ப்பிருக்கலாம். அப்போது சிசேரியன் செய்துதான் ஆக வேண்டும்" என்கிறார் கமலா செல்வராஜ்.
ஒரு பெண் 'தாய்' என்ற உன்னத நிலையை எட்டக்கூடிய அற்புத நிகழ்வு பிரசவம். பெண்களின் மனவலிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. 'குழந்தை பிறப்பு என்பது அந்த ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இனம்புரியாத மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிகழ்வு. எனவே, கர்ப்பம் அடைவதோ, குழந்தை பெற்றுக்கொள்வதோ ஒரு நோயல்ல. புதிய உயிர்கள் தோன்ற இயற்கை ஏற்படுத்திக்கொடுத்த வழிமுறை. பிரசவத்தின்போது, தாங்க முடியாத வலி இருக்கும்; அந்த வலி நிரந்தரமல்ல என்பதை உணரவேண்டும். பிரசவம் முடிந்ததும், வலியும் பறந்துவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தவழும். எனவே, அவசியமில்லாமல், சிசேரியன் செய்துகொள்வதை தவிர்ப்பது தாயின் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல...குழந்தையின் எதிர்காலத்துக்கும் நல்லது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தமிழ்நாட்டில் நிகழும் பிரசவங்களில் 34.1 சதவிகிதம் சிசேரியன்கள்! - அதிகரிக்கக் காரணம் என்ன?
TAGS :
COMMENTS