[ad_1]





Tiruppur: 

கடந்த 2015-ம் ஆண்டு டாஸ்மாக் ஒன்றில் நடைபெற்ற தகராறில், கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயன் என்பவரும், அவருடைய நண்பர் செந்தில்குமார் என்பவரும் கடந்த 2015-ல் வீட்டு உபயோக பொருள்களை டெலிவரி செய்வதற்காக சரக்கு லாரியில் கோவை வந்திருந்தனர். கோவையில் தங்களின் பணியை முடித்துவிட்டு, திருவண்ணாமலைக்கு திரும்புகையில், தெக்கலூர் என்ற பகுதியில் அமைந்திருந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது அந்த மதுக்கூடத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெயக்குமார் என்பவர், மதுபோதையில் இருந்த விஜயன் மற்றும் செந்தில்குமாரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்களுக்குள் நடந்த தகராறில், விஜயனை கட்டையால் பலமாக தாக்கியிருக்கிறார் ஜெயக்குமார். அதில் பலத்த காயமடைந்த விஜயன், சம்பவ இடத்தில் உயிரிழந்துபோனார்.


இச்சம்பவம் தொடர்பாக கொலை, கொள்ளை மற்றும் கொலை முயற்சி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலைக்கு காரணமான ஜெயக்குமாரை கைது செய்தனர். திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், கைது செய்யப்பட்ட மதுபானக்கூட ஊழியர் ஜெயக்குமார், கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், கொலை முயற்சிக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொள்ளை முயற்சிக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி முகமது ஜியாபுதின் தீர்ப்பு வழங்கினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்