[ad_1]





சென்னைக் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.




 

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக, சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்று தற்போது ஓய்வில் இருக்கிறார். மன வருத்தமே அவருடைய உடல்நிலை பாதிக்கக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அவர் தவிர்த்து வந்தார். கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அவரது மகன் வயிற்றுப் பேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகளுக்கும் நடந்த திருமணம் கருணாநிதி தலைமையில் நடந்தது. இது தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் தந்தது.

இந்தநிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்காக கோபாலபுரம் வந்த ராமதாஸை வீட்டு வாசல் வரை வந்து ஸ்டாலின் வரவேற்றார். ராமதாஸுடன் ஜி.கே. மணி மற்றும் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 15 நிமிடங்கள் அளவு நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய ராமதாஸ், ‘கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. என்னை யார் என்று கருணாநிதியிடம் ஸ்டாலின் கேட்டபோது, அவருக்கு எனது பெயரை முழுமையாக உச்சரிக்க முடியவில்லையே தவிர, என்னைப் புரிந்துகொள்கிறார். கருணாநிதி பேச முயற்சி செய்கிறார். பழைய நிலைக்கு நிச்சயம் வருவார். ஜி.கே. மணி, மூர்த்தி ஆகியோர்களின் தலையில் கைவைத்து அவர் ஆசீர்வாதமே செய்தார். முன்னைவிட தற்போது அவர் உடல்நிலம் தேறிவருகிறது. மேலும், அவர் உடல்நிலை தேறி பழைய நிலைக்கு வருவார் என்று விரும்புகிறேன். எனது விருப்பத்தை உங்கள் மூலம் நான் பகிர்ந்துகொள்கிறேன். நீங்கள் நூறு வயதைக் கடந்தும் வாழ வேண்டும் என்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும்போதும், தொலைபேசியில் வாழ்த்துக் கூறும்போதும் நான் கூறுவதுண்டு’ என்று ராமதாஸ் தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்