நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 1951-ல் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்திலிருந்து ஒருமுறைகூட பி.ஜே.பி. தனியாக தேர்தலில் நின்று மக்களவைக்கு வெற்றிபெற்றதில்லை. 1998 மற்றும் 1999 காலகட்டத்தில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு முறையும் அது கழகக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்த இரு பெரிய திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் விஜயகாந்த்-ன் தே.மு..தி.க. மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து பி.ஜே.பி. சந்தித்த 2014 மக்களவைத் தேர்தலில், அக்கட்சி கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்தத் தொகுதியின் எம்.பி. பொன் ராதாகிருஷ்ணன் தற்போது மத்திய நிதித்துறை இணை அமைச்சராக உள்ளார்.
வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு, 130 எம்.பி-க்களை உள்ளடக்கிய தென்மாநிலங்களில், அதுவும் பெரும்பான்மையாக 39 எம்.பி-க்களை தேர்ந்தெடுக்க சாத்தியங்கள் உள்ள மாநிலமான தமிழகத்திலிருந்து, ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மிகவும் பின்னடைவுதான். 2014 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக 37 இடங்களில் வென்று அ.தி.மு.க மக்களவையில், மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.இணைகோடாக...அதிக நாடாளுமன்றத் தொகுதிகளையுடைய வடமாநிலமான உத்தரப்பிரதேசத்திலிருந்து 2014 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 71 எம்.பி-க்களை பி.ஜே.பி வென்றிருந்தது. ஆனால், அதற்கான உத்திகளை பி.ஜே.பி-யின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையிலான பி.ஜே.பி. குழு, 2012-ம் ஆண்டிலேயே தொடங்கியிருந்தது.
அங்கே பூத் வாரியான கட்சியினர் மற்றும் மக்கள் சந்திப்புகளை அப்போதிலிருந்தே பி.ஜே.பி-யினர் தொடங்கியிருந்தார்கள் அமித் ஷா தரப்பினர். கூடவே, அங்கே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்காக செயல்பட்டுவரும் பலம்வாய்ந்த கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் என இருகட்சிகளின் தரப்பிலும் உள்கட்சிப் பூசல்கள் தொடங்கியிருந்தன. கட்சிகளுக்குள் நடந்து வரும் பிரச்னைகளுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றே பி.ஜே.பி. தரப்பும் மறுத்துவந்தது. ஆனால், அடுத்துவந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கு சில காலத்திற்கு முன்புதான் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் மீது, அரசு கரும்பு ஆலைகளை விற்று ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. மற்றொரு பக்கம் சமாஜ்வாடிக் கட்சியில், அப்போது முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தையும், கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்தது.
"எங்கேயோ வடகோடியில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தின் கதை தென்கோடியில் இருக்கும் நமக்கு எதற்கு?" என்கிற கேள்வி எழலாம். ஆனால் மேலே சொன்ன சம்பவங்களை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வின் சூழலுடன் உங்களால் எளிதில் ஒப்பிட முடிகிறது இல்லையா?.
'தமிழகத்தில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை' என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறது மாநில பி.ஜே.பி. தலைமை. ஆட்சியைப் பிடிக்கத் தேவையில்லை என்றாலும் 2019-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக 39 தொகுதிகள் இருக்கும் தமிழகத்தைக் கைப்பற்ற வேண்டிய சூழலில் தற்போது பி.ஜே.பி இருக்கிறது. அதற்கு பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சிக்குவந்த அ.தி.மு.க- வை உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்தியின் அடிப்படையில் கையாள வேண்டியது பி.ஜே.பி-யின் தேவையாகவும் இருக்கிறது. எது தேவையோ அதுவே தர்மம்.
இத்தனைக்கும் உத்தரப்பிரதேசத்திற்கு அத்தனை முறை பயணம் செய்த அமித் ஷா இன்னும் ஒருமுறை கூட தமிழகத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலடி எடுத்துவைக்க எண்ணிய ஒவ்வொரு முறையும் இரண்டு நாட்களுக்கு முன்பே சரிவரக் காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், உத்தரப்பிரதேசம்போல தமிழகத்தில் செயல்பாடுகளைத் தொடங்க நேரில் வரவேண்டும் என்கிற அவசியம் இல்லையே. புதுச்சேரியிலிருந்தும், விரலசைவில் அனைத்தையும் செய்துமுடிக்கலாமே.
அண்மையில் புதுச்சேரிக்கு வந்த அமித் ஷா, தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், "தமிழக உள்கட்சிப் பூசல்களுக்கு பி.ஜே.பி. எவ்வகையிலும் காரணம் இல்லை. மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது ஊழலற்ற ஆட்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் மத்தியில் இருக்கும் பி.ஜே.பி. அரசின் கொள்கை. பிரதமர் மோடியைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள் ஊழலற்ற ஆட்சியை நடத்துவோம் என்றே அவருக்கு வாக்குறுதி அளித்து உள்ளார்கள். மற்றபடி நாங்கள் தமிழகத்தில் பி.ஜே.பி-யை அடிவேரிலிருந்து வலுப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக, பூத் வாரிக் கட்சிக் கூட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்படும். இதற்காக 50 முதல் 100 கட்சித் தொண்டர்கள் பதிவு செய்யப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். புதுவையிலிருந்தும் 40 தொண்டர்கள் இதற்காக நியமிக்கப்படுவார்கள்” என்றார். மாயாவதி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது போல தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், 'அதற்கும் தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை' என்று அமித் ஷா அந்தப் பேட்டியில் மறுத்திருந்தார்.
சைதை தொகுதி 139வது வட்ட 18வது பூத் கமிட்டி கூட்டம்
அமித் ஷா கூறியது போலவே, தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பூத் வாரியாகக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டங்கள் பற்றி மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்த பி.ஜே.பி. மாவட்ட நிர்வாகி ஒருவர், “ஒவ்வொரு செவ்வாயும் பூத்வாரிக் கூட்டங்கள், ஏதாவது ஒரு தொகுதியில் நடக்கும். தேச பக்திப் பாடலுடன் தொடங்கும் கூட்டத்தில், கிளை அளவிலான வேலைப்பாடுகள், மாநில அளவில் கட்சி எடுத்துள்ள முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும். பிறகு கிளை அளவில் ஒவ்வொரு தெருக்களிலும் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசப்படும். இது தவிர பி.ஜே.பி-யின் முன்னோடிகளான தீனதயாள் உபாத்யாயா, சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்டவர்களின் படம் வைக்கப்பட்டு அவர்களைப் பற்றிய தகவல்கள் கிளை உறுப்பினர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்” என்றார்.
கழகக் கட்சிகளிடம் இல்லாத ஒரு பாஸிடிவ் அம்சம், 75 சதவிகிதம் இளைஞர்களே பி.ஜே.பி-யின் இதுபோன்ற பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கல்வி மேம்பாடு, மது ஒழிப்பு மற்றும் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் ஆர்பாட்டம் ஒன்றை பி.ஜே.பி. நடத்தியது. இந்த ஆர்பாட்டத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் கொடியை ஏந்திச் சென்ற நிர்வாகி முதல் பெரும்பாலானவர்கள் இளைஞர்களே.
இப்படியாகச் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்கள் கூறுவதுபோல ‘கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரும் திட்டமெல்லாம் பி.ஜே.பி-க்கு இல்லை’ என்பதை நாமும் நம்புவோமாக !
அன்று உத்தரப்பிரதேசம்... இன்று தமிழகம்... பி.ஜே.பி. பின்னணியில் என்னவெல்லாம் செய்கிறது?
TAGS :
COMMENTS