பெரம்பூரில் புறநகர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் தொடர் போராட்டங்கள், ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் மாணவர் பேரவை சார்பில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையை அடுத்த பெரம்பூர் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்றும், மத்திய மாநில அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலை மறிக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் நிலைய நடை மேடையில் இருந்து பேரணியாக சென்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது : மருத்துவ கனவை சுமந்து நின்ற அனிதாவின் இந்த நிலைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம். நீட் என்பது நவீன தீண்டாமை, அரசால் நடத்தப்படும் இனப்பெடுகொலை. தமிழகத்தின் தேசிய நீதிக்கு எதிரானது என்பதாலேயே இதனை எதிர்க்கிறோம். ஓபிஎஸ், ஈபிஎஸ் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது உறவினர்களும் தங்களது மருத்துவ பதவியை ராஜினாமா செய்து விட்டு நீட் தேர்வு எழுதி மீண்டும் மருத்துவராக வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும்வரை நாம் தமிழர் கட்சியினரின் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

English summary


Naam tamizhar party cadres protested at Perambur railway station arrested by police as they were tried to arrest the suburban train.