உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஸ்காட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் நடந்து வந்தது.  இதில், இந்தியாவின் சாய்னா நேவால் ஏற்கெனவே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு, இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் ஜப்பான் நாட்டின் நசோமி ஒக்குஹாரா மோதினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியின் முதல் செட்டை நசோமி கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதையடுத்து, இரண்டாவது செட்டை சிந்து தன் வசப்படுத்தினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியிருந்ததால், மூன்றாவது செட்டில் ஆட்டம் அனல் பறந்தது. இதைத்தொடர்ந்து மிகவும் பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது செட்டை நசோமி கைப்பற்றினார்.

இதனால், 21-19, 20-22, 22-20  என்ற செட் கணக்குகளில் நசோமி வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் நசோமி. இதனால், சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், வெள்ளிப் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், சிந்து ஏற்கெனவே இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.