
விஜய், இந்தப் பெயர் கொண்ட மந்திரக்காரன் தமிழ் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள்முடியப்போகிறது. தனது 10வது வயதிலேயே கேமரா முன் நடிக்க ஆரம்பித்து விட்ட இவர் 18வது வயதிலேயே கதாநாயகனாக திரையில் தோன்றினார். இந்த 25 வருட பயணங்களில் விஜய் கடந்து வந்த பாதை, அதில் அவர் கண்ட ஏற்ற இறக்கங்கள் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
எப்போதும் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் முதல் வெற்றியை மறக்க மாட்டான். அதைக் கொண்டாடுவான். ஆனால், அந்த முதல் வெற்றியை விஜய்யால் கொண்டாட முடியவில்லை. ஒரு கதாநாயனுக்குரிய முகவெட்டு, உடற்கட்டு என்று எதுவும் அவரது முதல் படத்தில் அவருக்கு இருக்கவில்லை. ‘உங்க அப்பா இயக்குநர், அதுனால நீ நடிக்க வந்துட்ட. உன்னை வச்சு அவரும் நிறைய படங்கள் எடுக்குறார்’ என்கிற பேச்சு விஜய் சென்ற இடமெல்லாம் அவரின் பின்னே வந்து கொண்டிருந்தது. அதனால், தன்னை வைத்து வேறு இயக்குநர்கள் படமெடுத்து அதில் வெற்றி காண வேண்டும் என்ற வெறியில் இருந்தார் விஜய்.
அப்போதுதான் விக்ரமன் விஜய்யை வைத்து ‘பூவே உனக்காக’ படத்தை இயக்க முன் வந்தார். அந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதில் ஒரு பெரிய நடிகர் இயக்குநர் விக்ரமனிடம், ‘கதை ரொம்ப நல்லாயிருக்கு. எங்களை மாதிரி பெரிய நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடிச்சாலும், ஹீரோ கதாபாத்திரம்தான் இந்த படத்துக்கு உயிர். அப்படியிருக்கும் போது இந்த வேடத்தை ஏன் புது பையனுக்குக் குடுக்கறீங்க? இண்டஸ்ட்ரில லீடுல இருக்கற நடிகர் யாருக்காச்சும் குடுக்கலாமே’னு சொல்லியிருக்கார்.
அதுக்கு விக்ரமன், ‘இந்தப் புறாவின் மீது எத்தனை பாரத்தை வைத்தாலும் தாங்கும் சார்’ என்று பதில் கூறியுள்ளார். இதை ‘பூவே உனக்காக’ படத்தின் வெற்றிவிழாவில் கூறிய விக்ரமன் இன்னொன்றும் சொன்னார்: “இந்தப் படம் ஜெயிச்சப்ப, அதே நடிகர் என்கிட்ட சொன்னது ரொம்ப முக்கியமானது: “இந்த புறா தலையில் நீங்க பெரிய பாறையையே வைக்கலாம் சார்’ அப்டின்னார் அவர். அப்படி தன்னை விமர்சித்த ஒருவருக்கு தன் உழைப்பின்மூலம் பதில் சொன்னார் விஜய். இந்த வெற்றியைத்தான் தனது முதல் வெற்றியாக விஜய் கொண்டாடினார்.
விஜய் சினிமாவுக்குள் வந்ததில் இருந்து இப்போது வரை பக்கா எண்டர்டெயினராக இருந்து வருகிறார். 1992ஆம் ஆண்டு தான், விஜய் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். நடிப்பு, நகைச்சுவை, நடனம் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் ஒரு நடிகரைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் இவர் பக்கம் வந்தார்கள். நடனத்தினாலேயே விஜய் மக்கள் மனதையும் குழந்தைகள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
நாளையதீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான போது விஜய் எப்படி நடனம் ஆடினாரோ அதே வேகத்தோடு தான் பைரவா படத்திலும் ஆடியிருந்தார். மெர்சல் படத்திலும் ஆடியிருப்பார். இத்தனை வருடங்களாக திரைத்துறையில் இருந்தாலும் ஒருபோதும் சோர்வு ஆகாமல் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார் விஜய்.
விஜய் அறிமுகமான காலகட்டத்தில் மட்டும்தான் அவரின் நடனத்துக்குப் போட்டியில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அறிமுகமாகிற எல்லா நடிகர்களும் நடனத்திற்கென தனி வகுப்புக்குச் சென்று பக்கா ஹீரோவாகத்தான் எண்ட்ரி ஆகிறார்கள். ஆனால், இப்போதும் நடனத்தில் கில்லி என்றால் அது விஜய் தான். அவரை அடித்துக்கொள்ள யாரும் வரவில்லை.
நாளையதீர்ப்பு படம் முதல் புதியகீதை படம் வரை காதல் ப்ளஸ் ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த விஜய், தன்னை முழு கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிக்கொண்டு நடித்த படம் தான் திருமலை. காதலில் இருந்து ஆக்ஷனுக்கு மட்டுமல்ல, தனது காஸ்டியூம், ஹேர் ஸ்டைல், டயலாக் டெலிவரி என தன்னை மொத்தமாக மாற்றிக் கொண்டார். அவரது கெரியரில் திருமலை விஜய்க்கு மிகவும் முக்கியமான படமாக இருந்தது. அதற்குப் பிறகு வந்த கில்லி, மதுர, திருப்பாச்சி எல்லாமே வேற லெவல் படங்கள்.
நடிப்பு, நடனம், ஹிட் என சினிமாவுக்குள் மட்டும் இல்லாமல் அதையும் தாண்டி யோசிக்க கூடியவர் விஜய். எந்த மாவட்டத்தில் நமக்கு ரசிகர்கள் அதிகம் என்பதை பார்த்து தனது படங்களின் ஷூட்டிங் அல்லது இசை வெளியீட்டு விழா என எதையாவது ஒன்றை அந்த மாவட்டத்தில் வைத்து தனது ரசிகர்களை குஷிப்படுத்துவார். அப்படித்தான் கில்லி படத்தின் ஷூட்டிங்கை மதுரையிலும், நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோவையிலும், பைரவா படத்தின் ஷூட்டிங்கை நெல்லையிலும் வைத்தார்.
2005ஆம் ஆண்டு வரை வருடத்துக்கு மூன்று, நான்கு படங்கள் என நடித்துவந்த விஜய், 2006ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களிலும் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். இது அவரின் சோர்வை காட்டவில்லை. தரமான படங்களை மட்டுமே தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையை காட்டுகிறது. விஜய் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தால், அந்த படத்தின் படப்பிடிப்பு-டப்பிங்-ப்ரமோஷன்-ரிலீஸ் என அனைத்தும் முடிந்த பின்னரே அடுத்தபடத்திற்கான வேலைகளில் இறங்குவார். இப்படி அடுத்து அடுத்து இடைவிடாமல் படங்களில் நடித்து வந்தாலும், ஒவ்வொரு படம் முடிந்தப்பின்னரும் குடும்பத்துடன் ஒரு உலக சுற்றுலா செல்வது வழக்கம். அதை அவர் இன்று வரை தொடர்ந்து வருகிறார்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விஜய்யை அதிகமாக ரசிக்கிறார்கள். எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்றால், விஜய்க்கு கேரளாவில் சிலை வைக்கும் அளவிற்கு. தமிழகத்தில் விஜய் படங்களுக்கு எந்த அளவுக்கு மார்க்கெட் இருக்கிறதோ அதே அளவுக்கு, சில சமயங்களில் அதைவிட அதிகமாகவே மார்க்கெட் இருக்கிறது. இது தமிழ் நடிகர்களுக்கு எளிதில் கிடைக்காதது.
எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், மேடையில் பேசினாலும் சைலண்ட் மோடிலேயே இருப்பார். அதை வைத்தே பலரும் விஜய் ரொம்ப அமைதியான ஆள் போல என்கிற அளவிற்கு நினைத்திருப்பார்கள். ஆனால், விஜய்யின் ஒரிஜினல் கேரக்டரை பார்க்க வேண்டும் என்றால் அவர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போக வேண்டும். தான் நடிக்கும் காட்சி முடிந்தாலும் கேரவனுக்கு செல்லாமல், மற்ற நடிகர்- நடிகைகளை கலாய்த்துக் கொண்டிருப்பாராம். அதுதான் விஜய்யின் ஒரிஜினல் கேரக்டர் என்று அவருடன் நடித்தவர்களுக்கு தெரியும்.
1996ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ரஜினி அரசியல் வருவது குறித்து பல விமர்சனங்கள் வருகின்றன. அவரும் அதற்கு ஏற்றார்போலவே அவ்வபோது பேசியும் வருகிறார். முன்பெல்லாம் ரஜினி அரசியல் பற்றி பேசினால் தீ பறக்கும், ஆனால் இப்போதோ அவர் அரசியல் பற்றி பேசினாலே மீம்ஸ் பறக்கிறது. இது ரஜினியை ஃபாலோ பண்ணும் விஜய்க்கு நடந்து விடக்கூடாது என்பதே விஜய் ரசிகர்களின் ஆசை. விஜய்யும் ரஜினியை போல அவ்வப்போது அரசியல் பற்றி பேசுவார். விமர்சனம் செய்வார். பல அரசியல் கட்சிகளும் ரசிகர்களும் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை விஜய்க்கு அரசியல் களம் காணவேண்டும் என்கிற ஆசை இருந்தால் அவரின் 45 வயதிற்குள், அதாவது இன்னும் 2 வருடங்களுக்குள் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி செய்யாமல் ரஜினியை போல் வருவேன்,வருவேன் என்று இழுத்துக்கொண்டிருந்தால் ரஜினியின் இன்றைய நிலைமை தான் நாளை விஜய்க்கும் நடக்கும். எனவே சூழலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது.
சமீபத்தில் நடந்த மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “நான் வெளியூர் போகும்போது நிறைய நண்பர்களுடன் பேசுவேன். அவங்க என்கிட்ட அதிகம் கேட்பது 'உங்களை சுற்றி இருக்கிற நெகட்டிவிட்டிஸை எப்படி ஹேண்டில் பண்ணுறீங்க?'னு என்பதை தான். அது ரொம்ப சிம்பிள்... நான் இக்னோர் பண்ணிடுவேன். கண்டுக்கவே மாட்டேன்’’ என்று பேசினார் விஜய். இவை விஜய்யின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அல்ல.. அவர் கடந்து வந்த வாழ்க்கை...
எது எப்படி இருந்தாலும் இந்த 25 வருடத்தை விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்ட வேண்டிய ஒன்று. அதுனால ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க.
நான்-ஸ்டாப் விஜய் ஃபீவர்!
TAGS :
COMMENTS