சென்னை: முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை உள்ளிட்ட அனைத்து இலாகாக்களும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டம் 166 (3) பிரிவின் படி, முதல்வர் ஜெயலலிதா இதுவரை வகித்து வந்த அனைத்து இலாகாக்களையும், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மாற்றி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் தலைமை வகிப்பார்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தனது பணிகளுக்குத் திரும்பும் வரை இது நீடிக்கும்.

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் உருவெடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா எப்போது நலம் பெற்று திரும்புவார் என்ற பெரிய கேள்வியையும் இந்த ஆளுநர் அறிக்கை எழுப்பியுள்ளது என்பதும் முக்கியமானது.

English summary

Tami Nadu governor Vidyasagar Rao has allocated all the departments of Chief Minister Jayalalitha to the finance minister O Panneerselvam with immediate effect.

News7Paper