சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் நேரில் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22-ந் தேதி வியாழக்கிழமை இரவு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்குக்கு சென்ற அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை மாலை 6.45 மணியளவில் நேரில் சென்று பார்த்தார்.

ஆளுநரிடம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார்.

முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் ஆளுநர். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கே தன்னை அழைத்துச் சென்றதற்காக டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கியதற்காகவும் டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

முதல்வர் வேகமாக தேறி வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையையும், அக்கறையையும் அளிக்கும் டாக்டர்களுக்கு ஆளுநர் பாராட்டும் தெரிவித்தார்.

முதல்வர் விரைவில் நலமடைய வேண்டி பழக் கூடை ஒன்றையும் ஆளுநர் அளித்தார்.

ஆளுநரின் விஜயத்தின்போது லோக்சபா துணைத் தலவர் தம்பித்துரை, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்றிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

Acting Governor of Tamil Nadu, Ch Vidyasagar Rao on Saturday meet Chief Minister J Jayalalithaa at Apollo Hospital.

News7Paper