சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறிவருவதாகவும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 12 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு என கூறிய மருத்துவமனை நிர்வாகம் பின்னர் நோய்தொற்று இருப்பதாக தெரிவித்தது.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அவரது மேற்பார்வையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், மகிழ்ச்சியான செய்தி... முதல்வர் ஜெயலலிதா நலமுடன் தேறிவருகிறார்... அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்வையிட்ட அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மாலினி பார்த்தசாரதி, ஜெயலலிதாவின் நீண்டகால தனிப்பட்ட நண்பர்தாம் என்பதால் இந்த மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
COMMENTS