நெல்லை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு பாடிகார்டு போல செயல்பட்டு வரும் ஹரி நாடார் என்பவரை போலீஸார் திடீரென பிடித்துச் சென்றுள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நாடார் மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஹரி நாடார். சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். சசிகலா புஷ்பா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தமிழகத்திற்கு அவர் வரும்போதெல்லாம் அவருக்குப் பாடிகார்டு போல ஹரி நாடார் செயல்பட்டு வந்தார். நீண்ட தலைமுடியுடன் காணப்படும் இவரும், ராக்கெட் ராஜா மற்றும் சுபாஷ் பண்ணையார் ஆகியோர் இணைந்து சசிகலா புஷ்பாவின் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர்.


Sasikala Pushpa's "Bodyguard" Hari Nadar arrested


என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையார் நினைவு நாளில் சுபாஷ் பண்ணையார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ராக்கெட் ராஜா, ஹரி நாடார் பாதுகாப்புடன் கலந்து கொண்ட சசிகலா புஷ்பா எம்பி முதல்வர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோருக்கு எதிராக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தொடர்ந்து சசிகலாவை குறை கூறிப் பேசி வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து கருத்து கூறியபோதும் அவர் சசிகலாவை தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.

இதையடுத்து சசிகலா புஷ்பாவை கடுமையாக விமர்சித்தும், சர்ச்சைக்குரிய புகைப்படங்களைப் போட்டும் பரபரப்பு போஸ்டர்கள் நெல்லையில் ஒட்டப்பட்டன. இந்த நிலையில், ஹரி நாடார் திருநெல்வேலி தனியார் நட்சத்திர விடுதியிலிருந்மது 16.10.2016 அதிகாலை 2 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டார். வள்ளியூர் போலீஸார், ஹரி நாடாரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஹரி நாடார் மீது சசிகலா புஷ்பா எம்பிக்கு எதிரான வழக்கில் ஆஜராகி வரும் வக்கீல் சுகந்தி ஜெய்சன் வீட்டை சூறையாடியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்த இரு சகோதரிகள் பாலியல் புகார் கூறியுள்ளனர். இந்த வழக்கில் சுகந்தி அந்தப் பெண்களுக்காக ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி நாடார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். ஹரி நாடார் கைதைத் தொடர்ந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கூடுதல் போலிஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட எஸ்.பி. விக்ரமன் கூறுகையில், வழக்கறிஞர் சுகந்தி வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில்தான் ஹரி நாடார் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்றார்.
English summary

Sacekd ADMK MP Sasikala Pushpa's "Bodyguard" Hari Nadar has been arrested by Valliyur police. He was secured from a star hotel in Nellai early morning today. He was sought in an attack case by the police.

News7Paper