சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை சுற்றி பெரிய சூழ்ச்சி நடைபெறுவதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்புக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து சசிகலா புஷ்பாவை கடுமையாக விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் கட்டுரை வெளியானது.
இது தொடர்பாக விகடனுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி வருவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும்.
ஜெ.வை யாரும் பார்க்கலையே...
உடல்நிலையைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர். இவர்கள்தான் ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லையே. அப்பறம் எப்படிச் சொல்கிறார்கள்?
தடுப்பது எந்த சக்தி?
டாக்டரும், சசிகலாவும் சொல்வதைத்தான் கேட்டு சொல்கிறார். பல அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர்கூட ஜெயலலிதாவை நேரில் சந்தித்தது இல்லை. இவர்களை அங்கு தடுக்கும் சக்தி எது?
ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 22 நாட்கள் ஆகின்றன. ஆனால், அவர்களின் உண்மை நிலை என்ன என்று ஓட்டு போட்ட மக்களுக்குச் சொல்லாமல் மறைக்கிறார்கள். ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி ஜெயலலிதாவை சுற்றி நடந்துகொண்டிருக்கிறது.
மோடி தலையிட வேண்டும்
ஓட்டுபோட்ட மக்களையும் முட்டாள் ஆக்கி வருகின்றனர். பிரதமர், இந்த விஷயத்தில் தலையிட்டு, தீவிர விசாரணை செய்து, ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
COMMENTS