சென்னை: முதல்வர் அலுவலக கோப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளில் சற்று தொய்வு நிலை ஏற்பட்டிருந்தது. முதல்வர் உடல் நலனை விசாரிப்பதற்காக அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பலர் மருத்துவமனையில் முகாமிட்டிருந்தனர்.

இந்தநிலையில் முதல்வரின் துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆளுநர் அறிவித்தார். இதையடுத்து தலைமைச் செயலகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறைச் செயலாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு வருகை தருகின்றனர். பொதுவாக முக்கிய கோப்புகளில் அரசு அதிகாரிகள் கையொப்பமிட்ட பிறகு இறுதியில் முதல்வர் கையெழுத்திடுவார். தற்போதுள்ள சூழ்நிலைப்படி, முதல்வர் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் என்று தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.

English summary

TN Govt issued a notification on CM officie incharge to Finance Minister O Panneerselvam.

News7Paper