சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களை முதல்வர் ஜெயலலிதா கவனித்து வருகிறார்.
அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் கண்காணிப்பிலேயே அவருக்கு அவ்வப்போது பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா வழக்கம்போல் உணவு சாப்பிடுகிறார்.
தொடர் சிகிச்சை
ஜெயலலிதாவுக்கு 5வது நாளாக நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சீரான இடைவெளியில் டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர். சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் உடன் தங்கியிருந்து ஜெயலலிதாவை கவனித்து வருகின்றனர்.
தொண்டர்கள் ஆர்வம்
சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வழக்கம்போல் நேற்றும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்கள் ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆவலோடு கேட்டறிந்து வருகின்றனர். மருத்துவமனை உள்ளே சென்று விட்டு வெளியே வரும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் வெளியே திரண்டு நின்ற தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு ஜெயலலிதாவின் உடல்நிலையை ஆர்வத்தோடு கேட்டு அறிந்து வருகின்றனர்.
பூஜைகள், வேண்டுதல்கள்
ஜெயலலிதா உடல்நலம் பூரண குணம் அடையவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோவில்களில் பூஜை செய்து அந்த பிரசாதத்தையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஜெயலலிதா, தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் கூட அரசு அலுவலக பணிகள் ஒருபோதும் சுணக்கம் அடையக்கூடாது என்பதில் கண்டிப்போடு உள்ளாராம். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டே நேற்று அவர் அரசு அலுவலக முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திட்டார்.
ஆலோசனை
இதேபோல காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அவர் அரசு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் சிகிச்சை முடிந்து பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயலலிதா வீடு திரும்பும் தேதி இன்று, அல்லது நாளைக்குள் முடிவு செய்யப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர்கள் கோட்டைக்கு சென்று பணியாற்றும்படி ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English summary
Eventhough CM Jayalalitha admitted in hospital with illness, she is doing official works from there.
News7Paper
TAGS :
COMMENTS