இரவில் சப்பாத்திக்கு எப்போதும் குருமா செய்து அலுத்துவிட்டதா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியெனில் அந்த பன்னீரைக் கொண்டு, இதுவரை நீங்கள் ஹோட்டலில் சுவைத்த கடாய் பன்னீரை வீட்டிலேயே செய்து சுவையுங்கள்.

சரி, இப்போது அந்த கடாய் பன்னீரின் எளிய செய்முறையை காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)

செய்முறை:

முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாய்/வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், கடாய் பன்னீர் ரெடி!!!

English summary



Simple Kadai Paneer Recipe


Want to know how to prepare kadai paneer at home easily? Check out and give it a try...