டெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு வரும் நவம்பர் 9, 10ந் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்து வருகிறது. இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கும் அரங்கில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியா அளித்துள்ள கடிதத்தில், தற்போது நிலவும் சூழ்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் மாநாட்டில் இந்திய அரசால் பங்கேற்க முடியாது. அண்டை நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதில் இந்தியா தற்பொழுதும் உறுதியுடன்தான் உள்ளது. ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத சூழலை உருவாக்கினால் மட்டுமே இதனை முன்னெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிக்க உள்ளதாக தெரிகிறது.

English summary

Prime Minister Narendra Modi will not attend the SAARC Summit in Islamabad in November amidst heightened tension between India and Pakistan.

News7Paper