சென்னை: நதிநீர் பிரச்சினைகளில் தமிழக அரசுக்கு அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குவது காவிரி டெல்டா பகுதி. இந்த பகுதியின் ஜீவ நாடியாக உள்ளது காவிரி நதிநீர். கர்நாடக மாநிலத்துடன் நமக்குள்ள காவிரி நதிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பிரச்சினையாகும்.
இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார் ஜெயலலிதா.
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, நதிநீர் பிரச்னைகளில் எனது தலைமையிலான அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும் என்று கூறினார்.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு பிரச்னையைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை அளித்தது. இதனையடுத்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 21-11-2014 அன்று முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. கடந்த ஆண்டும் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. புதிய முல்லைப்பெரியாறு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அளித்திருந்த அனுமதியை ஜெயலலிதா தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
152 அடி உயர்த்த நடவடிக்கை
மத்திய நீர்வளக் குழுமத்தின் திருப்திக்கு அணையை வலுப்படுத்திய பின்னர், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தனிப்பட்ட வல்லுனர்கள் பரிந்துரையைப் பெற்று, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், அதன் முழு நீர்த்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்தப்படும் என சட்டசபையில் அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவு
காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத்தில் இறுதி உத்தரவு 2007 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, மத்திய அரசு தனது இதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை வெளியிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ஜெயலலிதா. கடந்த 14ம் தேதியன்று பிரதமரை டெல்லியில் சந்தித்து அளித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கு
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியன அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசால் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வலியுறுத்தப்படும். அதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று சட்டசபையில் தெரிவித்தார் ஜெயலலிதா. அதன்படி இப்போது தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா
இன்னும் 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதன்படி சட்டசபைத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றி விடுவார் ஜெயலலிதா. முல்லைப்பெரியாறு அணை பாசன விவசாயிகள் பாராட்டு விழா எடுத்தது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் காவிரி டெல்டா பாசன விவசாயிகளும் மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தினாலும் ஆச்சரியமில்லை.
அன்று முல்லைப் பெரியாறு... இன்று காவிரி .. ஜெயலலிதாவுக்கு மேலும் ஒரு "சூப்பர்" வெற்றி!
English summary
Chief Minister Jayalalitha has scored a major victory in Cauvery issue.
TAGS :
COMMENTS