டெல்லி: கர்நாடகாவும் இந்தியாவின் ஒருபகுதிதான்... உச்சநீதிமன்ற உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் 144-வது பிரிவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் தொடர்ந்து உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் கர்நாடகா அரசு இந்த உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.
கடந்த முறை விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் சற்று காட்டமாக கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்து காவிரி நீரை திறக்க உத்தரவிட்டிருந்தனர். அதையும் கர்நாடகா அரசு ஏற்காமல் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கவில்லை.
உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் கர்நாடகாவை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். நீதிபதிகள் தெரிவித்த கண்டனம்:
- கர்நாடகா அரசு அரசியல் சட்டத்தையே சிதைத்துவிட்டது.
- இந்தியா கூட்டாட்சி அமைப்பை கொண்டது.
- கர்நாடகாவும் இந்தியாவின் ஒருபகுதிதான்...
- இந்திய இறையாண்மையை காப்பாற்ற வேண்டியது அனைத்து மாநில அரசுகளின் கடமை.
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் 144-வது பிரிவுக்கு கர்நாடகாவும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
- உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது.
- உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கர்நாடகா அரசு அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறியுள்ளது.
- கர்நாடகா அரசு பிடிவாதத்தைக் கைவிட வேண்டும்.
- உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிக்காவிட்டால் அதை எப்படி செயல்படுத்துவது என எங்களுக்கு தெரியும்.
- உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு நீதிமன்றத்தின் கடுமையான கோபத்துக்குள்ளாக நேரிடும்.
இவ்வாறு நீதிபதிகள் எச்சரித்தனர்.
COMMENTS