சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே வருகை தந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு மருத்துவர் ரிச்சர்ட் தொடர்ந்து சிகிச்சைகள் அளித்து வருகிறார்.
ஜெயலலிதா 2 வாரங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா உள்ளிட்டோரைத் தவிர வேறு எவரும் சந்திக்கவில்லை. இதனால் தேவையற்ற வதந்திகள் கிளம்பின.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெளிவாக விளக்கம் தர வேண்டும். அவர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே நேற்று சென்னை வருகை தந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். அவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருப்பார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேவையான சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் அப்பல்லோவுக்கு வருகை தந்த புகைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
COMMENTS