சென்னை: சில்க் ஸ்மிதா இந்த பெயர் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது. எழுபதுகளில் திரையுலக வாழ்க்கையை தொடங்கி 16 ஆண்டுகாலம் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த கனவுக் கன்னியின் 20ம் ஆண்டு நினைவுதினம் இன்று. பரபரப்பான இந்த சூழ்நிலையிலும் சில்க் சுமிதாவின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

வாழ்க்கையை மாற்றிய வண்டிச்சக்கரம் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சென்னைக்கு வந்த விஜயலட்சுமியை தமிழகம் அரவணைத்துக் கொண்டது. தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார். அவரை வினுச்சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகம் செய்தார்.

திரைப்படத்தில் சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு சில்க் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அந்த பெயர்தான் திரைப்பட ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கப்போகும் பெயர் அதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு சத்தியமாக தெரிந்திருக்காது.




தென்னிந்திய மொழிகளில் ராஜ்ஜியம்



தமிழில் திரை வாழ்க்கையை தொடங்கினாலும், காந்த கண்களாலும், போதை தரும் உதடுகளாலும் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், படு வேகமாக 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.








நடிப்பில் கவர்ந்த சில்க்



கவர்ச்சியில் தென்னிந்தியத் திரையுலகையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்த சில்க், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் தவறவில்லை. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.








கவர்ச்சி சூப்பர் ஸ்டார்



நடனத்தால் வெற்றி வாகை 1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். எத்தனையோ திரைப்படங்கள் இவரது கவர்ச்சி நடனத்திற்காகவே வெற்றிவாகை சூடியுள்ளன. பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை பெற்றது.








அது ஒரு கனாக்காலம்



கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஏன் நடிகர்களுமே கூட காத்திருந்த காலம் அது. அவர் கடித்து வைத்த ஆப்பிளை சாப்பிட போட்டிகள் மூண்ட கனாக் காலமும் அது. அப்படி ஒரு காந்த ஈர்ப்பை தன்னிடம் வைத்திருந்தவர் சில்க்.








மரணத்தை தழுவினார்



பதினேழு ஆண்டுகாலம் தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சில்க் 1996 ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் 23ம் தேதி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் இன்றைக்கும் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கிறது.








வாழ்க்கை வரலாறு



தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த தற்கொலை சம்பவத்தால் அதிர்ந்து போனது. '' தன்னோட தேவை என்னவென்று கடைசி வரை புரிந்து கொள்ள முடியாத அப்பாவி பெண்'' என சக நடிகைகள் கண்ணீர் விட்டனர். கடந்த 2011ம் ஆண்டு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி "தி டர்டி பிக்சர்" என்ற பெயரில் மிலன் லூத்ரியா இயக்கத்தில் ஹிந்தி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். இந்த படம் சக்கைப் போடு போட்டது.

20ம் ஆண்டு நினைவு தினம்



சில்க் ஸ்மிதா இறந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் இன்றைக்கும் ரசிகர்கள் டுவிட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்கள் மூலம் அஞ்சலி செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.
English summary

The 20th death anniversary of Andhra-born Silk Smitha is due in a month's time she was found dead on September 23, 1996