டெல்லி: காவிரியில் நாளை முதல் செப்டம்பர் 27ம் தேதிவரை விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலைக்கிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. காவிரியில் விநாடிக்கு 3000 கனஅடிநீர் திறந்து விடுவதற்கு காவிரி நதிநீர் மேற்பார்வைக்குழு உத்தவிட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.




காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம்



காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என காவிரி மேற்பார்வைக்குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் உருவானது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறிய கர்நாடகா, அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டிருந்த நீரை தற்போது அத்துமீறி நிறுத்தியது கர்நாடகா.








உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு



காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அதோடு காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவை எதிர்த்தும் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 3000 கனஅடி நீர் போதாது என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.








இருதரப்பு வாதங்கள்



தமிழக அரசின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக தரப்பு, தமிழகத்திற்கு மேலும் நீர் திறந்து விட இயலாது என கூறியது. குடிநீருக்கே தண்ணீர் இல்லாத போது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கமுடியாது எனவும் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தமிழக தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்திற்கு தரும் அளவிற்கு கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.








உச்சநீதிமன்றம் உத்தரவு



உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரியில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை காவிரியில் 6000 கனஅடி தண்ணீர் திறக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். இது காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டதை விட 3000 கனஅடி தண்ணீர் கூடுதலாக இருந்தாலும், 3 நாட்கள் தண்ணீர் விடுவதை குறைத்துள்ளது.








முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்



உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும்பட்சத்தில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை நிகழும் என்று கருதப்பட்டதை அடுத்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கர்நாடகாவில் 21ம் தேதிவரை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பள்ளிகள் அவசரம் அவசரமாக மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு தொடரும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. காவிரி பாசனப்பகுதிகளிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கர்நாடகா மாநில காவல்துறை மேற்கொண்டுள்ளது.
English summary

The Supreme Court today directed Karnataka to release 6,000 cusecs of water to Tamil Nadu from September 21 to 27. The ad interim order of the Supreme Court comes a day after the supervisory committee had directed Karnataka to release 3,000 cusecs of water to Tamil Nadu for ten days.