சென்னை: காவிரியில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்ற பிரச்சனை எப்போதெல்லாம் மேலெழுகிறதோ அப்போதெல்லாம் 1991ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற தமிழர்கள் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்ட 26 குடும்பத்தினருக்கும் பதற்றமும் பயமும் தொற்றிக் கொள்கிறது.

1991ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு தமிழர்கள் மீதான தாக்குதல் அரங்கேறின. பல தமிழ் குடும்பங்கள் கர்நாடகத்தில் இருந்து சிதறி ஓடின. அப்படி ஓடி சென்றவர்கள்தான் கர்நாடக மாநிலத்தின் மேற்கு பெங்களூருவில் உள்ள புறநகரான கமலா நகரில் இருந்து 26 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தங்கள் உயிரை பிடித்துக் கொண்டு ரயில் ஏறி சென்னைக்கு ஓடி வந்த அவர்கள், சிறப்பு முகாம் ஒன்றில் ஓராண்டு காலம் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பெரும் போராட்டத்திற்கு பிறகு, 1996ம் ஆண்டு ஓசூரில் பதலபள்ளியில் பாஸ்கர்தாஸ் நகரில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 26 குடும்பத்தினரும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் சாதாரண தினக் கூலிகள்.

காவிரி பிரச்சனை தொடர்பான வன்முறைகளை எப்போதெல்லாம் டிவியில் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு வித பயம் ஏற்பட்டு விடுவதாகவும், 1991ம் ஆண்டு நடைபெற்ற கொடுமையில் இருந்து இன்னும் எங்களால் வெளியே வரவே முடியவில்லை என்று கூறுகிறார் 48 வயதான வி. ராஜ்குமார்.

நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்து அடித்து துரத்தப்பட்டோம். கோபம் கொண்ட பெரும் கும்பல் ஒன்று எங்கள் வீடுகளை கொளுத்தின என்று பழைய கலவரத்தை நினைவு கூறும் 55 வயதான காசி, கர்நாடகத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்ததாக நினைவு கூர்ந்தார். பின்னர், அரசு 5000 ரூபாய் பணமும், நிலமும் வழங்கியதை அடுத்து சின்ன குடிசை ஒன்றை போட்டுக் கொண்டு அதில் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கமலா நகரில் இருந்து தாங்கள் அச்சத்தோடு வெளியேறிய பிறகு மீண்டும் அந்த இடத்திற்கு செல்லவே இல்லை. தமிழர்களுக்கு எதிரான அந்த வன்முறை மிகவும் துயரமானது என்று தொடர்ந்திருக்கும் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர் 52 வயதான வசந்தாவும், 53 வயதான பார்வதியும்.இந்தக் காவிரி பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அன்றாடம் காய்ச்சிகளான கூலித் தொழிலாளர்கள் தான். எனவே, காவிரி பிரச்சனையில் ஒரு நிரந்தரமான தீர்வை உடனடியாக எட்ட வேண்டும். காவிரி பிரச்சனை இரண்டு நாடுகளுக்கான பிரச்சனை இல்லை. இரண்டு மாநிலங்களுக்கான பிரச்சனை. எனவே, பிரச்சனையை சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கமலா நகரில் இருந்து தப்பி வந்த 26 குடும்பத்தினரும் கோரியுள்ளனர்.

English summary

Affected tamil family members in 1991 Cauvery row demanded permanent solution for Cauvery issue.